
அவன் பெயர் பிச்சை. தாசில்தார் அலுவலகத்தில் பணியில் இருக்கிறான். லஞ்சம் வாங்குவதிலும் அதைப் பதுக்குவதிலும் பலே கில்லாடி. மாட்டிக் கொள்ளாதவாறு திருடத் தெரிந்த திருடன். அவனுடன் வேலை பார்ப்பவள் தான் வள்ளி. இவளும் லஞ்சம் வாங்குபவள் தான். ஏன் இவர்கள் இருவருக்கும் யார் அதிகம் லஞ்சம் வாங்குகிறோம் எனும் அளவிற்கு போட்டிகள் பல நடந்தேறியிருக்கின்றன.
இதன் காரணமாகவே இருவரும் ஒருவரை ஒருவர் உயர் அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்தும், உடன் பணி புரிபவர்களை இரு அணியாகப் பிரித்து வைத்துக் கொண்டு புரணிப் பேசியும் திரிந்து கொண்டிருப்பர். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்தாலும் அந்த உயர் அதிகாரிக்கு பிச்சையால் சில பல காரியங்கள் (லஞ்சம்) நடக்க வேண்டியிருப்பதால் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பெயருக்கு ஒன்றிரண்டு முறை அவனது வீடுகள் சோதனையிடப் பட்டும், ஓரிரு முறை கைது செய்யப் பட்டும் இருக்கிறான். அவ்வளவே. ஆனால் வழக்குகள் மூடி மறைக்கப் பட்டு விட்டது. இவன் தனது ஆள் பலத்தைப் பயன் படுத்தி வள்ளியின் லஞ்சங்களை அம்பலப் படுத்தினான். அது தொடர்பாக வள்ளி மீது வழக்கும் தொடுக்கப் பட்டு நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இருவருக்குள்ளும் அடிக்கடி கருத்து யுத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. சில சமயங்களில் இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டு காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. சிலர் வேலையையும் இழந்திருக்கின்றனர். ஆனால் அது பற்றியெல்லாம் இருவரும் சிந்தித்தது கூட இல்லை.
சரி இவர்கள் இருவரும் ஏன் பகையாளியானார்கள்?
இருவருக்குள்ளும் யார் பெரிய ஆள்? என்ற எண்ணம் தலைதூக்கத் தொடங்கி அதன் பின் இருவரும் தங்களின் ஆதரவாளர்களைத் தனித் தனியே திரட்டி வைத்துக் கொண்டனர். பிச்சைக்கு இரண்டு மகன்கள். எப்படியாவது இருவருக்கும் அவன் வேலை பார்க்கும் இடத்திலேயே வேலை வாங்கிக் கொடுத்து விடுவது என விடாப்பிடியாக இருந்தான்.
வள்ளிக்கு பிள்ளைகள் இல்லை. தன் தோழி ரஞ்சிதா என்றால் அவளுக்கு உயிர். அவள் இல்லாமல் எங்கும் செல்ல மாட்டாள். தான் பெறும் லஞ்சங்களில் செய்யும் செலவுகளில் பாதி ரஞ்சிதாவுக்காக இருக்கும். எது வாங்கினாலும் அவளுக்கும் சேர்த்து வாங்குவாள். தன் தோழிக்கு எப்படியாவது தனது அலுவலகத்தில் வேலை வாங்க வேண்டும் என இவளும் விடாப்பிடியாக இருந்தாள்.
இவைதான் இவர்கள் இருவரையும் பகையாளிகளாக்கியது.
இந்நிலையில்தான் பிச்சை தன் அலுவலகக் கூட்டாளிகளையும், தனக்குத் தெரிந்த சில ரவுடிகளையும் வைத்துக் கொண்டு வேலை நிறுத்ததில் ஈடுபட்டான்.
"வள்ளி மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்.
அந்தத் திருடி வேலையிலிருந்து நீக்கப் பட வேண்டும்"
என்றவாறு அலுவலக வாயிலில் போஸ்டர் ஒட்டி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தான்.
அன்று அங்கு சாதிச்சான்றிதழ் மற்றும் இன்ன பிற சான்றிதழ்கள், பத்திரப் பதிவுகளுக்காக வந்த மக்கள் தலையிலடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அங்கு சாதிச்சான்று பெற வந்திருந்தான் குமரன். ஆர்ப்பாட்டக் கூட்டத்திலிருந்து வெளியே வந்தான் குமரனிடம் லஞ்சம் பெற்ற அந்த பியூன்.
"தம்பி இன்னைக்கு ஆபீஸ் நடக்காது. நீ பேசாம நாளைக்கு வா" என்றான்.
"அண்ணே! நாளைக்கு பேங்க் வேலைக்கு அப்ளிக்கேசன் போட லாஸ்ட் டேட். அதுக்கு சாதிச்சான்றிதழ் அவசியம் வேணும்" என்றான்.
"அப்ப காலையிலயே வந்துடு. நான் பாத்துக்குறேன். மதியத்துக்குள்ள அனுப்பிச்சிரலாம்" என்றான்.
சரி காலையில் வாங்கிக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு வீடு திரும்பினான். மறு நாள் காலை எட்டு மணிக்கெல்லாம் புறப்பட்டு அந்த அலுவலகத்தை அடைந்தான். அதிர்ச்சியில் செய்வதறியாது நின்றான்.
"எங்கள் தலைவியை திருடி என கூறி அவமானப்படுத்தி
ஆர்ப்பாட்டம் செய்ததை கண்டித்து
இன்று வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்"
என்ற போஸ்டரின் கீழ் அலுவலகப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்க அப்போது அருகாமை டீக்கடையிலிருந்து வந்த பியூன்
"தம்பி இன்னைக்கும் ஒன்னும் செய்ய முடியாது. நீ வேற பேங்குக்கு அப்ளிக்கேசன் போட்டுக்கலாம். நாளைக்கு வா" என்றான்.
எதுவும் பேசாமல் ஏமாற்றத்துடன் திரும்பினான். வாங்கி வைத்திருந்த பேங்க் அப்ளிக்கேசனை குப்பைத் தொட்டியில் போட முயன்ற போது கவனித்தான் அங்கு நிறைய அப்ளிக்கேசன்கள் கிடந்தன.



























