கடவுளை மற..மனிதனை நினை..

Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

15 November 2010

யார் இந்த ஐரோம் ஷர்மிளா?

நேற்று அசுரன் எழுதிய "பன்னியக் குளிப்பாட்டி அதுக்கு குதிரை என்று பெயர் வை!!" என்ற நல்ல பதிவைப் படித்தேன். அதன் பின் சிலருடனான விவாதங்களுக்குப் பின்னர் "ஐரோம் ஷர்மிளா" யார்? என்பது பலருக்குத் தெரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். அவர்களுக்காக இந்தப் பதிவு.

1972-ல் பிறந்த இந்த ஐரோம் சாரு ஷர்மிளா மணிப்பூரின் இரும்புப் பெண் என அனைவராலும் அழைக்கப் படுபவர். நவம்பர் 4, 2000 முதல் இன்று வரை இவர் உண்ணா விரதம் இருந்து வருகிறார். இவர் அப்படி இருக்கக் காரணம் என்ன? ஜனநாயக் நாடு என சொல்லப் படும் இந்தியாவில் உள்ள மணிப்பூரில் என்ன நடக்கிறது?

செப்டம்பர் 11, 1958 முதல் அருணாச்சலப்ரதேஷ், அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம், நாகாலந்து, திரிபுரா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் Armed Forces (Special Powers) Act (AFSPA) நடைமுறையில் இருக்கிறது. இந்த சட்டத்தின் முலம் இராணுவத்திற்கு வழங்கப் பட்டிருக்கும் உரிமைகள் பொது மக்களைக் கொன்று குவிக்கலாம் எனும் அளவில் இருக்கிறது.

*** இந்த சட்டத்தின் படி பொது வெளியில் 5 பேர் சேர்ந்து நின்றால் அவர்களை சுட்டு வீழ்த்தலாம்.
*** மேலும் யாரை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எவ்வித பிடி வாரண்ட் இல்லாமல் கைது செய்யலாம். அவர்களை சுட்டு வீழ்த்தவும் அதிகாரம் உண்டு.
*** இதற்காக அவர்கள் எங்கு வேண்டுமானாலும் எவ்வித உத்தரவுமின்றி தேடுதல் வேட்டை நிகழ்த்தலாம்.
*** இராணுவ அதிகாரிகள் மீது எவ்விதமான வழக்கும் பதிவு செய்ய இயலாது.


இதனை பயன்படுத்தி இராணுவம் அப்பவிப் பொதுமக்களையும் கொன்று குவித்திருக்கிறது. நவம்பர் 1, 2000 ம் ஆண்டு மணிப்பூரில் உள்ல "மலோம்" எனும் நகரத்தில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பத்து அப்பாவி பொதுமக்களை இராணுவம் சுட்டுக் கொன்றது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த போதும் "AFSPA" அதற்கு இடமளிக்கவில்லை. அப்போது 28 வயதே ஆன ஐரோம் ஷர்மிளா இந்த சட்டத்திற்கு எதிரக போர்க் கொடி தூக்கினார். தனது உண்ணாவிரதத்தை நவம்பர் 4, 2000 அன்று துவக்கினார். இந்த சட்டம் அமலில் இருக்கும் மாநிலங்களில் இருந்து நீக்கப் பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

நவம்பர் 6, 2000 அன்று அவர் IPC 309 பிரிவின் கீழ் "தற்கொலை முயற்சி" செய்வதாகக் கூறி போலீசாரால் கைது செய்யப் பட்டார். தண்ணீர் தவிர வேறு ஆகாரங்களை உட்கொள்வதில்லை என்பதில் ஷர்மிளா உறுதியாக இருந்து வருகிறார். ஆனால் கைது செய்யப் பட்ட ஒருவர் உயிரைக் காப்பது காவல் துறையின் வேலை என்பதால் வலுக்கட்டாயமாக அவருக்கு "Nasogastric intubation" (அதாவது மூக்கின் வழியே ஒரு ப்ளாஸ்டிக் ட்யூப் உபயோகித்து நீர் வகை உணவுகளை அளித்தல்) செய்தது.

இதன்பின் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அவர் தற்கொலை முயற்சி எனும் பிரிவில் கைது செய்யப் பட்டு இன்றுவரை சிறையிலிருக்கிறார். ஜீன் 6, 2005ம் ஆண்டு ஜீவன் ரெட்டி கமிசன் இந்த சட்டம் குறித்தான தனது கருத்துக்களைத் தெரிவித்தது. ஆனால் மன்மோகன் சிங் அரசு அதை ஒன்றரை ஆண்டுகள் வரை கிடப்பில் போட்டது. அதன் பின் ப்ரணாப் முகர்ஜி ரெட்டி கமிசன் அளித்த சட்டத் திருத்தக் கருத்துக்களை நிராகரித்தார்.

அத்துடன் அவர் இது போன்ற மாநிலங்களில் இராணுவம் இத்தகைய அதிகாரங்கள் இன்றி செயல் பட முடியாது என கருத்தும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2, 2006 ல் ஷர்மிளா விடுவிக்கப் பட்டது 4 மாத காலங்கள் டெல்லிக்குத் தப்பிச் சென்று அங்குள்ள மாணவர்கள், சமூக அமைப்புகளுடன் கை கோர்த்து ஒரு போராட்ட ஊர்வலம் நடத்தினார்.

அவரது உண்ணாவிரதம் டெல்லியிலும் தொடர்ந்ததால் டெல்லி போலீசாரால் மீண்டும் தற்கொலை முயற்சி பிரிவின் கீழ் கைது செய்யப் பட்டார்.அவர் பிரதமர், குடியரசு தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடித்டங்கள் அனுப்பினார். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இன்று வரை தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வரும் இரும்புப் பெண் ஐரோம் ஷர்மிளாவை நம்மில் பலருக்குத் தெரியாது. காரணம் நமது மீடியாக்களின் கையாலாகாத் தனம் மட்டுமல்ல. நமக்கு அவர் ஒரு சினிமா நாயகியாக இருந்திருந்தால் தெரிந்திருக்கும். ஆனால் அவர் சமூக நாயகியாக அல்லவா இருக்கிறார். எப்படி அவரைத் தெரிந்து கொள்ள முடியும்?