
நந்தலாலா படம் குறித்து பலவகையான விமர்சனங்கள் வெளி வந்த வண்ணமுள்ளன. அதில் பெரும்பாலும் கிகுஜிரோவின் காப்பி என்பது தான். நான் கிகுஜிரோ இனிமேல் தான் பார்க்கப் போகிறேன். அது குறித்து இன்னொரு பதிவில் விவாதிக்கலாம். இப்போது நான் பார்த்த நந்தலாலா குறித்து விவாதிக்கலாம்.
ஒரு சிறுவன் தன்னை விட்டுப் பிரிந்த தாயைத் தேடிப் புறப்படுகிறான். அதே நேரத்தில் மனநல காப்பகத்திலிருந்து தப்பி தன் தாயை பார்க்கப் புறப்படுகிறான் இன்னொருவன். இருவரின் ஒன்று சேர்ந்த பயணம் தான் படத்தின் கதை.
ஆரம்பக் காட்சியில் சிறுவன் அகியின் வீட்டு வேலைக்காரி திருப்பித் தருவதாக கூறி ஏமாற்றி சிறுவனிடம் பணம் பறிப்பது போல் ஒரு காட்சி. வேலைக்காரிகள் என்றால் அப்படித்தான் என்பது மிஸ்கினின் என்னமோ என்னவோ? ஆரம்பமே ஒரு கேவலமான சித்தரிப்புடன் தொடங்குகிறது.
அதன் பின்னர் சிறுவன் அகியுடன், பாஸ்கர் மணியும் இணைகிறார். இருவரின் நோக்கமும் தாயை சென்றடைவது என இருப்பதால் ஒன்றாக பயணிக்கத் தொடங்குகிறார்கள்.
அப்படி செல்கையில் வழியில் ஒருவர் பற்றி ஒருவர் பேசத் தொடங்குகையில் சிறுவன் பாஸ்கர் மணியின் அம்மா குறித்து கேட்கிறான். அதற்கு பாஸ்கர் மணி "அந்த சிறுக்கி நான் இந்த ஒயரம் இருக்குறப்ப ஆஸ்பத்திரில கொண்டு வந்து உட்டுட்டு போய்ட்டா!" என கடுமையாக தாயை சாடுகிறான். அடுத்து அப்பா குறித்து கேட்கையில் "அவன் எங்கயோ ஓடிப் போய்ட்டான்" என நகைச்சுவையுடன் பதிலளிக்கிறார்.
விட்டுப் போன தாயை "கன்னத்தில் எண்ணை தடவி வைடி சிறுக்கி வந்து அறையுறேன்" என கோபம் காட்டும் பாஸ்கர் மணி ஓடிப் போன தந்தைக் குறித்து எந்தக் கோபமும் காட்டாமல் "எதுக்காக ஓடிப் போனான்னே தெரியலன்னு" சிரித்துக் கொண்டே சொல்கிறான்.
சமூகத்தில் ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம். குடும்பத்தை விட்டு பொறுப்புகளைத் தட்டிக் கழித்து விட்டு தப்பி செல்லலாம் அதை இந்த ஆணாதிக்க சமூகம் பெரிது படுத்தாது எனப்தை தன்னுடைய ஆணாதிக்கத்தின் மூலம் எடுத்துரைக்கிறார் மிஸ்கின். பெண் செய்தால் அது கொடுமையான குற்றமாகவும், ஆண் செய்தால் அது சாதாரன தவறாகவும் பாவிக்கும் ஆணாதிக்க மனோபாவத்தில் மிஸ்கின் அமைத்திருக்கும் காட்சி தான் அது.
தன்னை மென்டல் என்று சொன்ன ஆட்டோக்காரரை போட்டு புரட்டிய்ர்டுக்கிறார் பாஸ்கர் மணி. இறுதியில் சிறுவன் "போடா மென்டல்" என்று சொல்லும் போது கோபப் பட்டு அழுகிறார். அப்படி இருக்கும் ஒருவனிடம் சாதிக் கலவரத்தில் காப்பாற்றப் பட்ட ஒரு பெண் "அண்ணே நீங்க எந்த சாதிண்ணே!?" என கேட்கையில் "மென்டல்" என கூறுவது ஒப்புக் கொள்ளக் கூடியதாக இல்லை. ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்குவதற்காக சேர்க்கப் பட்ட தமிழ் சினிமா மசாலா ஃபார்முலா தான் அந்தக் காட்சி.
ஒரு வழியாக அன்னவயல் வந்து சேர்கின்றனர் இருவரும். அங்கு அகியின் அம்மாவை சந்திக்கிறான் பாஸ்கர் மணி. அகியின் அம்மாவுக்கு வேறொரு திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை இருப்பதாகக் காட்டப் படுகிறது. பாஸ்கர் மணியின் காலில் விழுந்து கதறி அழுகிறாள் அந்தப் பெண். அவரை அறைந்து விடுகிறான் பாஸ்கர் மணி.
அதாவது ஒரு ஆண் ஒரு பெண்ணை விட்டு விட்டால் இன்னொரு திருமணம் செய்து கொள்ளக் கூடாது. ஆனால் ஒரு பெண் ஒரு ஆணை விட்டு விட்டால் அவன் இன்னொன்று அல்ல எத்தனை திருமணங்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இது போன்று பெண்ணை அடிமையாக்கி வைத்திருக்கும் கலாச்சாரத்திற்கு கொடிப் பிடித்திருக்கிறார் இயக்குனர் மிஸ்கின்.

ஒரு விபச்சார பெண் பாஸ்கர் மணியிடம் கேட்கிறாள் "அகியோட அம்மா எங்க?" என்று. அதற்கு பாஸ்கர் மணியின் பதில் "அவ நல்லவ இல்ல! அம்மால்லாம் நல்லவ இல்ல! அம்மா கெட்டது! அம்மான்னா குப்ப! குப்ப!" என பெண்ணை, தாயைக் கேவலப் படுத்தும் வசனம் பேசுகிறான்.
அந்தப் பெண் இன்னொரு திருமணம் செய்து கொண்டாள். அவளுக்கு அந்த உரிமை இல்லையா? அப்படியே மகனை விட்டுச் சென்றது தவறு என வாதிட்டாலும் விட்டுச்சென்ற அப்பாவிற்கு அந்தக் கடமை அவசியமில்லையா? விபச்சாரம் செய்யும் ஒரு பெண்ணை உடன் இருத்திக் கொள்ளும் பாஸ்கர் மணிக்கு அகியின் அம்மா இன்னொரு திருமணம் செய்தது தவறாகத் தெரிகிறது. அது முழுக்க முழுக்க ஆணாதிக்க சிந்தனை என்பதில் துளியும் சந்தேகமில்லை.
மேலும் சித்தரிக்கப் பட்ட அந்த விபச்சார பெண்ணின் பாத்திரம் தன்னை ஒரு முற்போக்கு சிந்தனையாளன் எனக் காட்டிக் கொண்டு கைத்தட்டல் வாங்க மிஸ்கினால் அமைக்கப் பட்ட போலி முற்போக்குத் தனமே அன்றி வேறில்லை. படத்தில் இத்தனை ஆணாதிக்கங்களையும் ஒளித்து வைத்து விட்டு மேலோட்டமாக ரசிகர்களுக்கு நல்லப் படம் போல் காட்டியிருக்கிறார்.
மொத்தத்தில் நந்தலாலா - மிஸ்கினின் ஆணாதிக்க மனதின் வெளிப்பாடு.
மகள் நேயாவின் நந்தலாலா குறித்தப் பார்வை மிக அருமை: தாய்மைச் சுமை