கடவுளை மற..மனிதனை நினை..
01 February 2015
30 January 2015
ஒபாமா வருகையும் அணுசக்தி ஒப்பந்தமும்
சரி இந்த மசோதாவின் நோக்கங்கள் என்ன?
1) போபால் வழக்கு யூனியன் கார்பைடுக்கு ஏற்படுத்தியத் தொந்தரவுகள் இனி வேறெந்த அமெரிக்க நிறுவனங்களுக்கும் வந்து விடக் கூடாது. இந்திய மக்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? அமெரிக்க முதலாளிகளுக்கு குடைப் பிடிக்கதான் நாங்கள் ஆட்சியமைத்திருக்கிறோம் என்பது போல் உள்ளது இச்செயல்.
2) இம்மசோதா சட்டமாக்கப் பட வில்லையென்றால் வெளி நாடுகளிலிருந்து அணு உலைகளோ, யுரேனியமோ நம்மால் வாங்க முடியாது என ஒரு பொய்த் தகவல் வேறு பரப்புகிறார்கள். இப்படி ஒரு சட்டம் இயற்றப் பட வேண்டுமென யுரேனியம் விற்பனை செய்யும் நாடுகள் (Nuclear suppliers group) கோரவில்லை. இச்சட்டமில்லாமலே ரஷ்யாவும், பிரன்சும் நமக்கு அணு உலைகளை விற்பனை செய்துள்ளன.
3) ஜெனரல் எலக்ட்ரிக், வெஸ்டிங்ஹவுஸ் போன்ற அமெரிக்க அணு உலைத் தயாரிப்பு நிறுவனங்கள் போபால் போல ஒரு பிரச்சினை தங்களுக்கு வந்து விடக்கூடாது என கொடுத்து வரும் நிர்பந்தங்கள் தான் இம்மசோதாவின் மூலக் காரணம்.
4) இவர்களிடமிருந்து இறக்குமதி செய்யப் படும் அணு உலைகளை இயக்கப் போவது நம் இந்திய அணுசக்தி கழகமே. ஒரு வேளை எந்திரத்தின் கோளாறு அல்லது வடிவமைப்பின் கரணமாக விபத்து நேர்ந்தால் பொது மக்கள் அந்நிறுவனங்களீன் மீது வழக்கு போட முடியாது. இந்திய அணுசக்தி கழகம் மட்டுமே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். ஏன் விபத்தின் காரணம் எந்திரம் தான் என நிரூபிக்கப் பட்டாலும் இந்திய அணுசக்தி கழகம் கூட அவர்களிடம் இழப்பீடு கேட்க முடியாது. விற்பனை ஒப்பந்தப் படி என்ன இழப்பீடோ அது மட்டுமேக் கிடைக்கும். இதைக்கூட நீர்த்து போக வைக்கும் திருட்டுத் தனமானத் திருத்தங்களும் இச்சட்டத்தில் செய்யப் பட்டிருக்கின்றன.
5) அணு உலை விபத்து ஏற்பட்டு அதனால் நாம் பாதிக்கப் பட்டால் நம்மில் யாரும் அமெரிக்க நீதி மன்றங்களில் வழக்குத் தொடுக்க முடியாது. இவையனைத்தும் இந்திய நீதி மன்றத்தால் மட்டுமே விசாரிக்கப் பட வேண்டும் என்கிறது இம்மசோதா.
6) இதையும் மீறி யாராவது வழக்குத் தொடுத்தால் என்ன செய்வது? என யோசித்து அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் திட்டமாக சர்வதேச அணுசக்தி முகமையின் ஈட்டுத்தொகை தொடர்பான ஒப்பந்தத்திலும்(IAEA's Convention on Supplementary Compensation) இந்திய அரசு கையொப்பமிட முடிவெடுத்திருக்கிறது. இதில் கையொப்பமிடும் நாடுகளுக்கு விபத்து ஒன்றுக்கு சுமார் 30கோடி டாலரை வழங்குவார்கள் என்பதால் அந்நாட்டு மக்கள் வேறு எங்கும் வழக்குத் தொடுக்கும் உரிமையை இழக்க வேண்டும்.
7) விபத்துக்கான ஈட்டுத் தொகையை மதிப்பிடுகின்ற அதிகாரத்தை சுற்றுச்சூழல், சுகாதாரத் துறைகளிடமிருந்து பிடுங்குகிறது இம்மசோதா. இனி அம்மதிப்பீடுகள் முழுதும் "அணுசக்தி பாதிப்பு இழப்பீட்டு ஆணையர்" என்பவரால் நிர்ணயிக்கப்படும். அந்த ஆணையரின் முடிவை எதிர்த்து வழக்குப் போட யாருக்கும் உரிமை கிடையாது.
8) கதிர்வீச்சினால் விபத்து நேரிட்டால் அதிலிருந்து 30 ஆண்டுகளுக்கு அங்கு நடக்கும் அனைத்து பாதிப்புகளுக்கும் அந்நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என்பது வியன்னா மற்றும் பாரிஸ் கன்வென்சன்களின் முடிவு செய்யப் பட்ட சர்வதேச நெறிமுறை. ஆனால் இம்மசோதா சொல்வது என்னவென்றால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் பாதிப்புகளுக்கு எந்த இழப்பீடும் வழங்கப் பட மாட்டாது.
9) ஒரு வேளை போர், உள்நாட்டு போர், பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப் பட்டு அதனால் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டு மக்கள் பாதிக்கப் பட்டால் அதற்கு எந்த விதமான இழப்பீடும் வழங்கப் பட மாட்டாது.
10) அணு உலை விபத்து ஏற்பட்டு எத்தனை லட்சம் உயிர்கள் போனாலும் அதிக பட்ச இழப்பீட்டுத் தொகை 45 கோடி டாலர் மட்டுமே. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பின் படி 2300 கோடி ரூபாய். ஆனால் அமெரிக்காவில் இத்தகைய விபத்து ஏற்பட்டால் அங்கு இழப்பீட்டுத் தொகை 10 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 50ஆயிரம் கோடி ரூபாய். இதிலிருந்து 20 இந்தியனின் உயிர் 1 அமெரிக்க உயிருக்கு சமம் என்கிறது இம்மசோதா.
இது போன்றொரு சட்ட மசோதா உலகின் எந்த ஒரு நாட்டிலும் இயற்றப் படவில்லை. இதன் மூலம் இவர்கள் இந்திய மக்களின் உயிர்களுக்கு உச்சவரம்பு விதிக்கின்றனர். அமெரிக்க முதலாளிகளுக்கு சொறிந்து விட்டுக் கொண்டு இந்திய மக்களை புதை குழியில் தள்ளி கொன்று குவிக்கும் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படலாமா? இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியவர்கள் பொது மக்களாகிய நாம்தான்.
13 October 2012
எது கலாச்சார சீரழிவு?
17 January 2012
நண்பன் - பதிவுலக மேன்மக்களே!
நண்பன் குறித்து பதிவுலகில் பல விமரிசனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதில் பதிவுலகில் சிலர் தங்களை "மேன்மக்களாக" நினைத்து பார்ப்பனிய கோவணத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு திரிவதும் பார்க்க முடிகிறது. மேலும் சிலர் தங்களை பெரியாரின் பேரன் எனும் அளவுக்கு பினாத்தி கொண்டு தட்டிக் கேட்காமல் சந்தர்ப்ப வாதியாகவும் திரிந்து கொண்டிருக்கின்றனர்.
சரி இவர்களை பற்றி பார்ப்பதற்கு முன் நண்பனை பற்றி பார்க்கலாம்.
ஆனால் திரையரங்கில் இந்தக் காட்சியில் அனைவரும் கை தட்டி சிரித்தது மனதை வருத்தமடைய செய்தது. நம்மை நம் மக்களை கேவலப் படுத்தும் பார்ப்பன ஆதிக்கம் மிக்க காட்சியை எப்படி ரசித்து கைதட்டி சிரிக்க முடிகிறது எனத் தோன்றியது.
சென்னை தி.நகரில் உள்ள 10 downing street வழியாக வார இறுதி நாட்களின் இரவில் சென்று பாருங்கள் குடித்து விட்டு வெளியில் வருவது முனிம்மாக்களா அல்லது ரியாக்களா என்பது புரியும்.
இது போன்ற கல்லூரிகளில் முதல் நாள் வகுப்பில் மாணவர்கள் அனைவரும் தங்களை அறிமுகம் செய்யும் பொழுது, அவர்கள் எந்த கோட்டாவில் சேர்ந்தார்கள் என்பதையும் சேர்த்து உரக்க சொல்ல வேண்டும். அவர்கள் எந்த கோட்டா என்பது ஆசிரியர்களுக்கு கொடுக்கப் படும் லிஸ்டில் இருக்கும். ஆனால் இப்படி உரக்க சொல்ல வைக்கக் காரணம் மற்ற மாணவர்களுக்கும் தலித்துகளை அடையாளப் படுத்தும் நோக்கம். அதன் பின் சக மாணவர்களின், ஆசிரியர்களின் கேலி, கிண்டல் அவமானங்களை சகித்துக் கொண்டு அவர்கள் படிக்க வேண்டும். இதையெல்லாம் கடந்து வந்து படிப்பில் சிறந்து விளங்கினால், "ஒரு தலித் எப்படி மேலே வரலாம்" என்ற எண்ணம் ஆசிரியர்கள் மத்தியிலும் பீறிட்டு கிளம்புகிறது. அந்த மாணவர்களிடம் "நீ எப்புடி இந்த செமஸ்டரில் பாஸ் ஆகுரன்னு பாக்குறேன்" என்பதாக சவால் விட்டு அவர்களை பெயிலாக்கி, அதனால் தற்கொலை செய்து கொண்ட கதையும் உண்டு.
பாரி படித்து பட்டம் பெற்றது தனக்காக அல்ல, இன்னொருவனுக்காக எனத் தெரிந்தும் அதை பொருட்படுத்தாமல் தன் நண்பனை தேடி ஓடும காட்சியில் தெளிவாகத் தெரிகிறது அந்தப் பார்ப்பனீயம். "யார் வம்பு தும்புக்கும் போவாத. அப்பத்தான் நல்ல புள்ள" ன்னு சொல்லுற பார்ப்பநீயக் கருத்து தான் அது.
சரி இப்போது அந்த இரு பதிவர்களின் கதைக்கு வருவோம். முதலாமவர் பதிவுலக பிரபலம் கேபிள் சங்கர். இந்த நண்பன் குறித்து அவர் எழுதிய விமர்சனத்தில் ஏழ்மையிலும் சுவாரஸ்யத்தையும், நகைச்சுவையையும் எதிர் பார்த்த பார்ப்பனீய வஞ்சகம் தெரிகிறது. கீழ் உள்ள வரிகள் அதற்கு சான்று.
//இன்னொரு பக்கம் ஜீவாவின் வழக்கமான பரரலைஸ்ட் அப்பா, கல்யாணத்துக்கு காத்திருக்கும் அக்கா, தனி ஒருத்தியாய் குடும்பத்தைக் காப்பாற்றும் அம்மா என்பதை வழக்கமாய் சொலலாமல் படு காமெடியாய் வெளிப்படுத்தியக் காட்சி,//
வேலாயுதம் போன்ற பல படங்களை ரீமேக்கிய ராஜாவை கிண்டலடிக்கும் இந்த கேபிள் ராஜா சங்கர் ரீமேக்கியத்தை பெருமையாக பேசியதோடு இல்லாமல் "மேன் மக்கள் மேன் மக்களே" என பாராட்டு வேறு. இந்த மேன் மக்கள் பார்ப்பன இயக்குனராக இருந்தால் மட்டும் தான் போல.
வேட்டை, வேலாயுதத்தின் பல லாஜிக் மீறல்களை நக்கலடித்த இவர் கண்களுக்கு இந்த நண்பனின் லாஜிக் மீறல்கள் தெரியவில்லையா? மருத்துவமனைக்குள் பைக் ஓட்டும் விஜய்,குடித்து விட்டு கடசி பென்ச்சில் இருப்பவனுக்கு கூட தெரியாமல் தூங்கும் மூவர், தேர்வு எண் தெரியாத ஆசிரியரிடம் பேப்பரை கலைத்து விட்டு ஓடுவது (ஏன் அவனுங்கள கண்டு புடிக்க முடியாதா என்ன?), மிகைப் படுத்தப் பட்ட ஏழைக் குடும்பத்துக் காட்சிகள் , எந்த சர்டிபிக்கேட்டும் இல்லாமலே சயின்டிஸ்ட் ஆன விஜய் இப்படியாக நீள்கிறது லாஜிக் மீறல்கள்.
அந்த மேன் மக்கள் குரூப்புக்கு இதெல்லாம் தெரியலையா? இந்த மேன்மக்கள் பிரிவின் தலைவர் கேபிள் ராஜாவுக்கு ஆதரவாக பல கருத்து மழைகள் வேறு. அதில் குறிப்பாக ஊடகன் என்ற அஜீத் ரசிகர் வேறு. இவர் எழுதிய கருத்துரை கீழே.
//ஊடகன் said...
இந்தி படம் போலவே இன்ச் பய் இன்ச் அதே சீன் அதே டயலாக், இந்த மாதிரி எடுத்தா சிபி ராஜ், பிரசன்னா, ஸ்ரீகாந்த் நடிச்சா கூட படம் சூப் ஹிட்டாயுடும். இதை சங்கர் இல்ல, எந்த புது டைரக்டர் எடுத்தாலும் சூப்பர் ஹிட் தான்.......! ஆகையால் இந்த வெற்றி ஒரு வெற்றியே அல்ல....!
நண்பன் = Xerox காப்பி//
இது காப்பின்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா அந்த விமர்சனத்தில் சொல்லப் பட்ட பார்ப்பநீயக் கருத்துக்கள், மேன்மக்கள் குறித்தக் கருத்துகளை எல்லாம் விட்டு விட்டு தான் ஒரு அஜீத் ரசிகன் என்பதை மட்டும் மனதில் வைத்து கருத்து சொன்ன இவரைப் பார்த்தால் ஒரு உண்மை புரிகிறது. இவரை போன்றவர்கள் தான் திரையரங்கில் அந்த ஏழைகள் குறித்த இழிவான காட்சிகளில் கை தட்டி சிரித்தவர்களாக இருக்க முடியும் என்று.
அதே கேபிளின் விமரிசனத்தில் ஒரு நண்பரின் நியாயமான கேள்வி.
----------Jayadev Das said...
எழுத்தாளர் எழுதிய திரைக்கதைக்கு மரியாதை கொடுத்து அவருக்கு கிரெடிட் கொடுக்கும் தன்மையை பார்க்கும் போது மேன் மக்கள் மேன் மக்களே என்று பாராட்டத்தான் தோன்றுகிறது.\\Boys படம் ஏதோ ஆங்கிலப் படத்தில் காபி, அந்தப் படத்திற்கு கிரெடிட் கொடுத்தாரா? மேன் மக்கள் எப்போதும் மேன்மக்களாக இருக்க வேண்டும், அவ்வப்போது மேன்மக்கள் போல வேடம் போடுபவரை மேன் மக்கள் லிஸ்டில் வைக்க முடியாது.--------------------
இந்த நியாயமான கேள்விக்கு கூட கேபிள் ராஜா-விடம் பதில் இல்லை. எந்திரனை காப்பியடித்த போது அதன் ஒரிஜினல் எழுத்தாளருக்கு கிரெடிட் கொடுக்காத இவர் இந்த ஒரு படத்தின் மூலம் மேன்மக்களாகி விட முடியுமென்றால் பார்ப்பனீயம் அவரை தாங்கிப் பிடிக்கிறது என்று தான் அர்த்தம்.
ஒரு வேலை தான் எழுதிய "அழிக்க பிறந்தவன்" நாவலை வெளியிட்டது அந்த கேபிளார் என்ற காரணத்தால் இருக்குமோ? அல்லது அவர் நாவலின் கதை "நண்பன் திருட்டு வீ.சி.டி" யை மையப் படுத்தி வருவதால் மேன்மக்களிடம் வாய்ப்பு தேடும் எண்ணமாக இருக்குமோ? இந்த இரண்டில் எது காரனமானாலும் அதற்கு பெயர் சந்தர்ப்ப வாதம் என்றல்லவா ஆகிறது. ஒரு வேலை இந்த சந்தர்ப்பவாதி முற்போக்காளர் போர்வைக்குள் ஒளிந்திருக்கிறாரோ எனத் தோன்றுகிறது. பிட்டு படங்களுக்கே பாய்ந்து பாய்ந்து விமரிசனம் எழுதும் இவரால் சக நண்பரை விமரிசிக்க முடியாதது வியப்பாக இருக்கிறது.
10 January 2012
முல்லைப் பெரியாறும் மீனவ பிரச்சினையும்
05 January 2012
மருத்துவர்கள் வேலைநிறுத்தம் - தனியார்மய தாண்டவம்

தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவர் மருத்துவம் பயில நேரிடையாகவே பல லகரங்களை செலுத்த வேண்டியிருக்கிறது. அதற்கு பரிந்துறை செய்யும் அரசியல்வாதி மற்றும் கல்லூரி நிர்வாகிகளுக்கு தனியாக லகரங்களை கொடுக்க வேண்டியுள்ளது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசால் ஒதுக்கப் பட்ட இடங்களுக்கும் கட்டணமாக அவர்கள் பல லகரங்கள் செலுத்த வேண்டும்.
உதாரணத்திற்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணம் எட்டாயிரம் மட்டுமே. ஆனால் தனியார் கல்லூரிகளில் மூன்று லகரங்கள் வரை ஆகும். அது மட்டுமல்லாது தனியார் கல்லூரிகளில் சீட்டு வாங்க குறைந்த பட்சம் இருபது லகரங்கள் செலவழிக்க வேண்டும்.இந்த பின்னணியில் படித்து வெளியில் வரும் பலர் அரசு மருத்துவர்கள் ஆக மேலும் சில லகரங்களை செலவழிக்கிறார்கள். இப்படி வரும் ஒருவர் எப்படி நேர்மையாக வைத்தியம் பார்ப்பார்?
அது மட்டுமில்லாது நம் அரசாங்கமும் இந்த தனியார் மருத்துவமனைகளுக்கு ஆதரவாக அரசு மருத்துவமனைகளின் தரத்தைக் கண்டு கொள்வதில்லை. வேண்டுமென்றே புறக்கணிக்கப் படுகிறது அரசு மருத்துவமனைகள். இதை எதிர்த்து அரசு மருத்துவர்கள் ஒருங்கிணைந்து போராடுவார்களா? நிச்சயம் இல்லை. காரணம் அரசு மருத்துவமனைகள் தரமாக்கப் பட்டால், சுகாதாரமாக்கப் பட்டால் தங்களின் தனியார் கிளினிக்குகள் கூட்டமிழந்து விடும்.
தனியார் கம்பெனிகள் ஊழியர்களை பணிக்கு சேர்க்கும் போது போடும் ஒப்பந்தத்தில் வேறு எங்கும் பணி புரிவதாக தெரிந்தால் பணி நீக்கம் செய்யப் படுவீர்கள் என ஒப்பந்தம் போடுகிறது. அது போல் நீக்கப் பட்ட சிலரையும் நான் நேரில் பார்த்ததுண்டு. ஆனால் அரசு மருத்துவர்களில் இ.எஸ்.ஐ(ESI) மருத்துவமனைகளில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் தான் இந்த விதி கடை பிடிக்கப் படுகிறது. இங்கு ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும் கொலை செய்யப் பட்ட அந்த பெண் மருத்துவர் ஒரு இ.எஸ்.ஐ(ESI) பணியாளர்.
மற்ற மருத்துவர்கள் தனியாக மருத்துவம் பழக(practice) அரசே அனுமதியளித்திருக்கிறது. இந்த அரசாங்கம் ஏன் அது போன்ற தனியார் க்ளினிக்குகளை ஆதரிக்கிறது? அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. இதன் நோக்கம் அரசு மருத்துவ மனைகளை அடியோடு ஒழித்து தனியார், கார்ப்பரேட் மருத்துவமனைகளை வளர்த்து விடுவது.
அப்படி செய்கையில் அரசு மருத்துவர்களின் போராட்ட வீரியங்க்களை குறைக்க அவர்களுக்கு தனியார் க்ளினிக்குகளை வடிகால் ஆக்குகிறது. மேலும் இந்த விடயத்தில் மக்களும் கொதித்து விட கூடாது என்பதில் அரசு குறியாக உள்ளது. அதற்காக தான் "அரசு மருத்துவமனைகள் என்றால் தரமற்றவை, சுகாதாரமற்றவை" என்ற கருத்தை மக்கள் மனதில் உருவாக்க திட்டமிட்டே அரசு மருத்துவமனைகள் ஒதுக்கி வைக்கப் படுகின்றன.
அது மட்டுமில்லாது இந்த தனியார்மயம் இல்லையென்றால் அந்த ஆட்சியாளர்களும் காசு பார்க்க முடியாது. இந்த மருத்துவம் வெறுமனே மருத்துவமனை அளவில் தனியார் மயமாக்கப் படவில்லை. அதன் அடிப்படை கல்வியிலிருந்தே தனியார் மயமாக்கப் பட்டிருக்கிறது.
மேலும் இந்த அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் தனியார் மருத்துவர்களும் பங்கேற்க காரணம் வேறொன்ருமில்லை, நாளை தங்களுக்கும் அந்த பெண் மருத்துவரின் நிலைமை வந்து விடக் கூடாது என்ற பயம் தான். இன்று இந்த தனியார் மருத்துவமனைகளின் காசு வெறிக்கு பலியானவர்கள் பலர்.
அவர்களுக்கு போராட முன் வராத இவர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்வது கொலை செய்யப் பட்ட அந்த பெண் மருத்துவருக்காக அல்ல. நாளை தங்களுக்கும் அந்த நிலை வந்து விடக் கூடாது என்ற பயம் தான்.
அரசு கல்லூரிகளில் படித்தவர்களும் கிளினிக் வைத்து காசு பார்க்க இந்த சூழல் தூண்டி விடுகிறது. இவை அனைத்தும் திட்டமிட்டே செய்யப் பட்டிருக்கின்றன.
அரசு மருத்துவமனைகளின் தரம் சீர் செய்யப் படவும், தனியார் மயத்தை ஒழிக்கவும் மக்கள் தான் ஒன்றிணைந்து போராட வேண்டும். மக்கள் புரட்சி மட்டுமே இதற்கு தீர்வாக முடியும். ஆட்சி மாற்றம் ஒரு போதும் தீர்வை தராது.
28 August 2011
ஹசாரே இப்போது காங்கிரசின் கையாள்.
அன்னாவின் போராட்டத்தில் மக்கள் என்பவர்கள் யார்? இரோம் சர்மிளாவின் உண்ணாவிரத்தை ஆதரித்த மணிப்பூரிகள் மக்கள் இல்லையா? ஜகத்சிங்பூரிலும், கலிங்காநகரிலும், நியாம்கிரியிலும், பஸ்தாரிலும், செய்தாபூரிலும், சுரங்கக் கொள்ளைக் குண்டர்களுக்கு எதிராகவும், குண்டாந்தடிப் போலிஸ்காரர்களுக்கு எதிராகவும், திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மக்கள் இல்லையா? போபால் வாயுக் கசிவில், முடமானவர்கள், இறந்தவர்கள், மக்கள் இல்லையா? அல்லது நர்மதா பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட அணையால் இடம்பெயர்ந்தவர்கள் மக்கள் இல்லையா? தனது நிலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாதென எதிர்ப்பு தெரிவித்த நோயிடா அல்லது புனே அல்லது ஹரியானாவைச் சார்ந்த விவசாயிகள் மக்கள் இல்லையா? அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் இவர்கள் இல்லை.
பின்னர் அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் யார்? தான் கோரும் லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு, சட்டமாக மாற்றப்படாவிட்டால், உணவருந்தாமலேயே உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று மிரட்டும் அன்னா என்ற 74 வயது மனிதரை, ஊடகத்தில் பார்க்கும் இந்த பார்வையாளர்கள்தான், அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் ஆவர். எப்படி பசித்தவர்கள் புசிப்பதற்காக இயேசு கிறிஸ்து மீன்களையும் உணவுத் துண்டங்களையும் பல மடங்குகளாக ஆக்கினாரோ, அது போலவே தொலைக்காட்சி ஊடகங்கள் பல மடங்குப் பார்வையாளர்களைப் பெருக்கி, இந்த மக்களை பன்மடங்காக்கியது. "ஒரு பில்லியன் குரல்கள் ஒலித்து விட்டன” என்று நமக்குச் சொல்லப்பட்டு விட்டது. "இந்தியா என்றால் அன்னாதான்.”
மக்களின் குரலான இந்தப் புதிய சாது உண்மையிலேயே யார்? உடனடி அவசரத் தேவையான மக்கள் விசயங்கள் குறித்து, இவர் எதுவும் போதுமான அளவுக்கு பேசியதாக நாம் கேட்டதே இல்லை. நமது பக்கத்தில் நடந்த விவசாயிகளின் தற்கொலை குறித்தோ அல்லது நக்சலைட்டுக்கு எதிராக நடந்த பச்சை வேட்டை ஆபரேசனைக் குறித்தோ இவர் ஒரு வார்த்தை கூட உதிர்த்தது கிடையாது. சிங்கூர் பற்றியோ, நந்திகிராம் பற்றியோ, லால்கார் பற்றியோ, போஸ்கோ பற்றியோ, விவசாயிகள் போராட்டம் பற்றியோ, அல்லது சிறப்புப் பொருளாதார மண்டலத்திலுள்ள பிரச்சினைகள் பற்றியோ, இவர் எதுவும் பேசியதில்லை. மத்திய இந்தியாவிலுள்ள காடுகளில் இந்திய இராணுவத்தை நிறுத்தி வைக்க திட்டமிட்டிருக்கும் அரசின் திட்டங்கள் குறித்து, அவருக்கு எந்த அபிப்பராயமும் இருப்பதாகத் தெரியவில்லை.
மராத்தியராக இல்லாதவர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ராஜ் தாக்கரேயின் அரசியலை ஆதரித்தவர் அன்னா. 2002ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களை நேரடியாக நிர்வகித்த குஜராத் முதலமைச்சரின் "வளர்ச்சி மாதிரி"யை மனமாரப் புகழ்ந்தவர். (இதைச் சொன்னதும் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பைக் கண்டு அன்னா, தனது வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொண்டாலும், மோடி மீதான தனது உவப்பை என்றுமே வாபஸ் பெற்றதில்லை)""".
முழுக்கட்டுரையை படிக்க கீற்று
14 July 2011
மும்பை குண்டுவெடிப்பும் ரஜினி ரசிகனின் ஏமாற்றமும்


18 June 2011
அவன் இவன் - எஸ்.ரா வின் கிழிந்த முகத்திரை


01 June 2011
சச்சின் ஒரு போலிச் சாமியார்(!)

சச்சினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள் இப்போதாவது புரிந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை. "கிரிக்கெட் ஒரு மதம் என்றால் சச்சின் அங்கு கடவுளாம்". அதுவும் சரிதான் காசு இருந்தாதான் கடவுளையே தரிசிக்க முடியும்ங்கற காலம் தான் இது.
ஐ.பி.எல்லில் விளையாடிய கடவுள் தேச விளையாட்டிற்கு ஓய்வு கேட்கிறது. காசுக்காக விளையாடும் போது அந்த ஓய்வு தேவைப் படவில்லை. அதிலேயே தெரிகிறது அதன் லட்சணம். கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்தால் நாம் வல்லரசாகி விடுவோம் என போலிக் கனவில் வாழும் நம் மக்கள் இருக்கும் வரை இது போன்ற போலிக் கடவுள்களுக்கு பஞ்சமிருக்காது.
இன்றும் கூட இந்த மக்கள் சச்சினுக்கு வயதாகி விட்டது. அதனால் அவருக்கு ஓய்வு தேவைதான் என சொல்கிறது. தான் நினைத்த கடவுளை நியாயப் படுத்தும் முட்டாள் தனமான வேலையை செய்ய அது தயங்குவதுமில்லை.
கவாஸ்கர் போல் சிலருக்கு வந்திருக்கும் கோபம் கூட சச்சின் அடுத்து அடிக்கும் 50 அல்லது 100 களில் மறைந்து போகும். இல்லாத கடவுள் மீது இதே மக்களுக்கு அவ்வப்போது வந்து மறையும் கோபம் தான் அது. இவர்கள் இருக்கும் வரை சச்சின் போன்ற போலிக் கடவுள்கள் முளைக்கத்தான் செய்வார்கள்.
08 May 2011
எங்கேயும் காதல் - மேட்டுக்குடி காதல

லண்டனில் வசிக்கும் ஒரு பரம "ஏழை" (!) குடும்பத்துப் பெண் தான் படத்தின் நாயகி. ஒரு பணக்கார வாலிபன் 11 மாசம் பிசினசில் பிசி அப்பறம் ஒரு மாசம் லண்டன் வந்து குட்டி புட்டிகளுடன் குதியாட்டம் போடுறவன்.
அவன் மீது இந்த பரம ஏழை பெண்ணுக்கு காதல் (அப்புடின்னு சொல்றாங்க ஆனா ஏன்னு சொல்லலப்பா). அவன் எப்புடி பட்டவன்னு தெரிஞ்சும் லவ் பண்றா. ஆனா அவன் அவளை அலட்சியப் படுத்துறான். அவன மடக்க அவன் டெக்னிக்கையே யூஸ் பண்றா.
அவளோட அப்பா கேஸ்ல வந்தவங்கள எல்லாம் தன்னோட பாய் பிரண்ட்ஸ்-நு சொல்லி ஹிரோவ ஏமாத்துறா. ஒரு கட்டத்துல இவனும் அவளை லவ் பண்ண ஆரம்பிக்கிறான். அந்த பொண்ணு சொன்ன பாய் பிரண்ட்ஸ் யாருன்னு தெரிஞ்சிக்க அவ அப்பா வச்சிருக்குற டிடக்டிவ் ஏஜன்சி போறான்.
தன் பொண்ணுதான்னு கண்டு புடிச்ச டிடக்டிவ் ஹீரோ கிட்ட போய் தன் குடும்பத்தின் "ஏழ்மை" பத்தி பேசுறாரு. கடைசில ரெண்டு ஏழைகளும் சேருறாங்க. இந்த மொக்கையதான் படம்னு சொல்லி எடுத்துருக்காங்க.
எங்கேயும் காதல் - மேட்டுக்குடி காதல
23 December 2010
பதிவர்களே வாருங்கள்!
நூல் வெளியீட்டு விழா
நாள்: 26.12.2010
நேரம்: மாலை 5 மணி
இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி,
வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர்,
சென்னை
(பனகல் பூங்காவிலிருந்து சைதை செல்லும் சாலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் எதிரில், டாக்டர் நடேசன் பூங்காவிற்கு அருகில் இந்தப் பள்ளி இருக்கிறது)
விழா தலைமை:
தோழர் துரை. சண்முகம், கீழைக்காற்று
நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்
நூல் பெறுவோர்:
கவிஞர் தமிழேந்தி
பதிவர் சந்தனமுல்லை
சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன்,
பொதுச் செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு
பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் அனைவரும் வருக!
(விழா அன்று இந்த எட்டு நூல்களும் தனித்தனியாக 30% தள்ளுபடி விலையில் கிடைக்கும். சனவரி 4 முதல் 17 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் கீழைக்காற்றின் கடை எண்: 39,40)
16 December 2010
ஐ.பி.எல் சீசன் - 4
11 December 2010
குடும்பத்தோடு கொள்ளையடிக்க வாங்க!

ஹீரோ: "ஸ்பெக்ட்ரம் புகழ்" ஆ.ராசா
இணை இயக்கம்: மு.க ஸ்டாலின்
ஸ்டண்ட்: மு.க.அழகிரி
காஸ்ட்யூம்: தயாநிதி
மீடியா: கலாநிதி
இயக்கம்: கருணாநிதி
தயாரிப்பு: மக்கள் நிதி (வேற யாரு நாம தான்)
09 December 2010
எது இலக்கியம் ஜெயமோகன்(!?)

அருந்ததிராய் குறித்த ஜெயமோகனின் கட்டுரையை நண்பர் கார்த்தியின் மூலம் தெரிந்து படித்து முடித்தேன். இலக்கியப் படைப்புகளை வார்த்தை ஜாலங்களாலும், மொழி விளையாட்டுகளிலும் எடுத்தியம்புகின்றவர்கள் மட்டுமே இலக்கியவாதிகள் என பிரகடணம் செய்து வைத்திருக்கிறார்கள் போலும்.
அந்த அளவு தான் ஜெயமோ சொல்லும் இலக்கியங்களும். இலக்கியங்கள் என்பவை வெறும் பொழுது போக்கு அம்சங்களாகவும், கட்டுக் கதைகளாகவும் மட்டுமே இருப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. இலக்கியம் மக்களுக்கான ஒன்றாக இருக்க வேண்டும். அது எடுத்தியம்புகின்ற விடயங்கள் மக்களின் வாழ்வியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும். மாறாக மக்களை மடையர்களாக்கி வைத்திருக்கக் கூடாது.
எந்த ஒரு இலக்கியமும் மக்களுடன் கலந்து, மக்களைப் புரிந்து அவர்களின் வாழ்வியல் அவலங்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். மாறாக அது ஆளும் வர்க்கத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும் குடை பிடிப்பதாக இருக்கக் கூடாது. மேலும் காசு பார்ப்பது மட்டுமே நோக்காகக் கொண்ட எதுவும் முழுமையான மக்கள் இலக்கியமாக இருக்க முடியாது.
இந்த ஜெமோ சொல்வது போல் வெறும் புகழையும், பணத்தையும் மட்டுமே நோக்காக கொண்டிருந்தால் அருந்ததி ராய் என்றோ அதன் உச்சத்திற்கு சென்றிருக்க முடியும். பலர் எழுதி விட்டுச் சென்ற கட்டுக் கதைகளை போல் மக்களுடன் கலவாத இலக்கியங்களைப் படைத்து உலகம் முழுதும் ஒன்று சேர்ந்து போற்றும் ஒரு மாபெரும் எழுத்தாளர் என்ற பெயரைப் பெற்றிருக்க முடியும்.

அவர் விரும்பியது பாமர மக்களை. அவர்களின் அவலநிலைக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தினார். அவர் ஒன்றும் உங்களைப் போல் மக்களுடன் கலவாத கற்பனைகளை எழுதிப் பெயர் வாங்கும் நோக்கம் கொண்டவரல்ல. மாறாக மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் நிலைப் பாட்டைப் புரிந்து கொண்டு அதை முதலாளித் துவம், அதிகார வர்க்கத்திற்கெதிரான எழுத்தாக மாற்றியிருக்கிறார்.
அவர் ஒன்றும் சினிமாக்களுக்கு வசனம் எழுதிப் பிழைப்பு நடத்தவில்லை. ஊடகங்கள் பெரும்பாலும் ஊமைகளாகவே இருந்திருக்கின்றன. அவைகள் ஆளும் வர்க்கம், முதலாளிகளுக்குமான் சேவைகளையே செய்து வந்திருக்கின்றன. அவற்றின் மாய பிம்பங்களில் மக்கள் மூழ்கடிக்கப் பட்டிருக்கின்றனர்.
ஊடகங்களால் பெரிது படுத்தாத உண்மை நிலைகள் பல அருந்ததி ராய் போன்றவர்களால் வெளிக்கொணரப் படுகிறது. இது போன்று ஆள்பவனுக்கு பயப்படாமல் குரல் கொடுக்க, மக்களுடன் இணைத்துக் கொள்ள உங்களுக்குத் துணிவிருக்கிறதா?
இன்று "ஐரோம் ஷர்மிளா" பற்றி யாருக்குத் தெரியும்?
நண்பர்களிடம் கேட்டால் புது நடிகையா? என்ற கேள்வி வருகிறது. அவரை இந்த ஊடகங்கள் இன்றும் வெளிக் காட்டாமல், அவரது நியாயமான போராட்டத்திற்கு ஆதரவளிக்காமல் ஆளும் வர்க்கங்களுக்கு குடை பிடித்து வருகிறது. போராட்டங்களில் இணைந்து கொள்ளாமல் போராடுபவர்களை கேவலப் படுத்தும் உங்களுக்கு "ஐரோம் ஷர்மிளா" குறித்து தெரியாதா? அவரைப் பற்றி எதாவது எழுதியிருக்கிறீர்களா?
நக்சல்பாரி பிரச்சினை, காஷ்மீர் போராட்டங்கள் குறித்த உங்களின் கருத்துக்கள் தெள்ளத் தெளிவாக உங்களின் பதிவில் தெரிகிறது. அவர்களின் போராட்டங்களைக் கொச்சைப் படுத்தியிருக்கிறீர்கள். ஒடுக்கப் பட்ட ஏழை வர்க்கத்தின் போராட்டம் வேதாந்தாவுக்கு எதிரானது. அவர்களைத் துப்பாக்கியேந்தும் சூழலுக்கு கொண்டு சென்று நிறுத்தியது முதலாளிகளுக்கு கொடி பிடிக்கும் அரசாங்கம்.
அதனை எதிர்த்து தங்களின் நியாயத்திற்காக போராடி வருபவர்களுக்கு சூட்டப் பட்ட பெயர் தீவிரவாதிகள். அதற்கு ஒத்து ஊத உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் வேறு.
கஷ்மீரில் நடப்பது என்ன ஜாதிக் கலவரமா? மக்கள் ஒன்று கூடி நடத்தும் போராட்டம் அது. அந்த மக்களுடன் கலந்து பின்னர் அவர்களின் நிலைப்பாட்டை எடுத்து சொன்னவர் இந்த அருந்ததி ராய். அதனால் அவர் மீது வழக்குப் பதிவு. அது போன்று மக்களின் நிலைப் பாட்டை நேரடியாக ஆய்ந்து எடுத்து சொல்லவும் அதனால் வரும் எதிர் விளைவுகளுக்கு அஞ்சாமலும் எழுத நீங்கள் தயாரா?
மக்களைத் திரட்டிப் போராடினால் மட்டுமே எதையும் பெற முடியும் என்ற உங்களின் நிலைப் பாட்டிற்கு பாராட்டுகள். ஆனால் அவர்களை எப்படி திரட்ட முடியும்? என உங்களால் சொல்ல முடியுமா?
மக்களுக்கு உண்மைகளை ஒளித்து வைத்து மேம்போக்காக சொல்லும் ஊடகங்கள் தானே நம்மிடம் இருப்பவை? மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்லிப் புரிய வைக்க வேண்டிய கடமை உங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு இல்லையா? இலக்கியவாதிகள் என்பவர்கள் மக்களுடன் இருக்க வேண்டும். ஆளும் வர்க்கங்களுக்கு பயந்து, அடி பணிந்து இருக்கக் கூடாது.
இலக்கியம் என்பதும் மக்களின் உணர்வுகளை கிளர்ந்தெழ செய்யுமளவில் இருக்க வேண்டும். அநீதிகளுக்கு எதிரானதாக இருக்க வேண்டும். சமூக அவலங்களுக்கு பாரபட்சமின்றி குரல் கொடுப்பதாக இருக்க வேண்டும். நீங்கள் சொல்வதெல்லாம் இலக்கியமாகாது ஜெயமோ.
அருந்ததி ராய் குறித்த ஜெமோ பதிவு
06 December 2010
நந்தலாலா - மிஸ்கினின் திமிர்

நந்தலாலா படம் குறித்து பலவகையான விமர்சனங்கள் வெளி வந்த வண்ணமுள்ளன. அதில் பெரும்பாலும் கிகுஜிரோவின் காப்பி என்பது தான். நான் கிகுஜிரோ இனிமேல் தான் பார்க்கப் போகிறேன். அது குறித்து இன்னொரு பதிவில் விவாதிக்கலாம். இப்போது நான் பார்த்த நந்தலாலா குறித்து விவாதிக்கலாம்.
ஒரு சிறுவன் தன்னை விட்டுப் பிரிந்த தாயைத் தேடிப் புறப்படுகிறான். அதே நேரத்தில் மனநல காப்பகத்திலிருந்து தப்பி தன் தாயை பார்க்கப் புறப்படுகிறான் இன்னொருவன். இருவரின் ஒன்று சேர்ந்த பயணம் தான் படத்தின் கதை.
ஆரம்பக் காட்சியில் சிறுவன் அகியின் வீட்டு வேலைக்காரி திருப்பித் தருவதாக கூறி ஏமாற்றி சிறுவனிடம் பணம் பறிப்பது போல் ஒரு காட்சி. வேலைக்காரிகள் என்றால் அப்படித்தான் என்பது மிஸ்கினின் என்னமோ என்னவோ? ஆரம்பமே ஒரு கேவலமான சித்தரிப்புடன் தொடங்குகிறது.
அதன் பின்னர் சிறுவன் அகியுடன், பாஸ்கர் மணியும் இணைகிறார். இருவரின் நோக்கமும் தாயை சென்றடைவது என இருப்பதால் ஒன்றாக பயணிக்கத் தொடங்குகிறார்கள்.
அப்படி செல்கையில் வழியில் ஒருவர் பற்றி ஒருவர் பேசத் தொடங்குகையில் சிறுவன் பாஸ்கர் மணியின் அம்மா குறித்து கேட்கிறான். அதற்கு பாஸ்கர் மணி "அந்த சிறுக்கி நான் இந்த ஒயரம் இருக்குறப்ப ஆஸ்பத்திரில கொண்டு வந்து உட்டுட்டு போய்ட்டா!" என கடுமையாக தாயை சாடுகிறான். அடுத்து அப்பா குறித்து கேட்கையில் "அவன் எங்கயோ ஓடிப் போய்ட்டான்" என நகைச்சுவையுடன் பதிலளிக்கிறார்.
விட்டுப் போன தாயை "கன்னத்தில் எண்ணை தடவி வைடி சிறுக்கி வந்து அறையுறேன்" என கோபம் காட்டும் பாஸ்கர் மணி ஓடிப் போன தந்தைக் குறித்து எந்தக் கோபமும் காட்டாமல் "எதுக்காக ஓடிப் போனான்னே தெரியலன்னு" சிரித்துக் கொண்டே சொல்கிறான்.
சமூகத்தில் ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம். குடும்பத்தை விட்டு பொறுப்புகளைத் தட்டிக் கழித்து விட்டு தப்பி செல்லலாம் அதை இந்த ஆணாதிக்க சமூகம் பெரிது படுத்தாது எனப்தை தன்னுடைய ஆணாதிக்கத்தின் மூலம் எடுத்துரைக்கிறார் மிஸ்கின். பெண் செய்தால் அது கொடுமையான குற்றமாகவும், ஆண் செய்தால் அது சாதாரன தவறாகவும் பாவிக்கும் ஆணாதிக்க மனோபாவத்தில் மிஸ்கின் அமைத்திருக்கும் காட்சி தான் அது.
தன்னை மென்டல் என்று சொன்ன ஆட்டோக்காரரை போட்டு புரட்டிய்ர்டுக்கிறார் பாஸ்கர் மணி. இறுதியில் சிறுவன் "போடா மென்டல்" என்று சொல்லும் போது கோபப் பட்டு அழுகிறார். அப்படி இருக்கும் ஒருவனிடம் சாதிக் கலவரத்தில் காப்பாற்றப் பட்ட ஒரு பெண் "அண்ணே நீங்க எந்த சாதிண்ணே!?" என கேட்கையில் "மென்டல்" என கூறுவது ஒப்புக் கொள்ளக் கூடியதாக இல்லை. ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்குவதற்காக சேர்க்கப் பட்ட தமிழ் சினிமா மசாலா ஃபார்முலா தான் அந்தக் காட்சி.
ஒரு வழியாக அன்னவயல் வந்து சேர்கின்றனர் இருவரும். அங்கு அகியின் அம்மாவை சந்திக்கிறான் பாஸ்கர் மணி. அகியின் அம்மாவுக்கு வேறொரு திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை இருப்பதாகக் காட்டப் படுகிறது. பாஸ்கர் மணியின் காலில் விழுந்து கதறி அழுகிறாள் அந்தப் பெண். அவரை அறைந்து விடுகிறான் பாஸ்கர் மணி.
அதாவது ஒரு ஆண் ஒரு பெண்ணை விட்டு விட்டால் இன்னொரு திருமணம் செய்து கொள்ளக் கூடாது. ஆனால் ஒரு பெண் ஒரு ஆணை விட்டு விட்டால் அவன் இன்னொன்று அல்ல எத்தனை திருமணங்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இது போன்று பெண்ணை அடிமையாக்கி வைத்திருக்கும் கலாச்சாரத்திற்கு கொடிப் பிடித்திருக்கிறார் இயக்குனர் மிஸ்கின்.

ஒரு விபச்சார பெண் பாஸ்கர் மணியிடம் கேட்கிறாள் "அகியோட அம்மா எங்க?" என்று. அதற்கு பாஸ்கர் மணியின் பதில் "அவ நல்லவ இல்ல! அம்மால்லாம் நல்லவ இல்ல! அம்மா கெட்டது! அம்மான்னா குப்ப! குப்ப!" என பெண்ணை, தாயைக் கேவலப் படுத்தும் வசனம் பேசுகிறான்.
அந்தப் பெண் இன்னொரு திருமணம் செய்து கொண்டாள். அவளுக்கு அந்த உரிமை இல்லையா? அப்படியே மகனை விட்டுச் சென்றது தவறு என வாதிட்டாலும் விட்டுச்சென்ற அப்பாவிற்கு அந்தக் கடமை அவசியமில்லையா? விபச்சாரம் செய்யும் ஒரு பெண்ணை உடன் இருத்திக் கொள்ளும் பாஸ்கர் மணிக்கு அகியின் அம்மா இன்னொரு திருமணம் செய்தது தவறாகத் தெரிகிறது. அது முழுக்க முழுக்க ஆணாதிக்க சிந்தனை என்பதில் துளியும் சந்தேகமில்லை.
மேலும் சித்தரிக்கப் பட்ட அந்த விபச்சார பெண்ணின் பாத்திரம் தன்னை ஒரு முற்போக்கு சிந்தனையாளன் எனக் காட்டிக் கொண்டு கைத்தட்டல் வாங்க மிஸ்கினால் அமைக்கப் பட்ட போலி முற்போக்குத் தனமே அன்றி வேறில்லை. படத்தில் இத்தனை ஆணாதிக்கங்களையும் ஒளித்து வைத்து விட்டு மேலோட்டமாக ரசிகர்களுக்கு நல்லப் படம் போல் காட்டியிருக்கிறார்.
மொத்தத்தில் நந்தலாலா - மிஸ்கினின் ஆணாதிக்க மனதின் வெளிப்பாடு.
மகள் நேயாவின் நந்தலாலா குறித்தப் பார்வை மிக அருமை: தாய்மைச் சுமை
27 November 2010
2050-ல் தமிழ்மொழி பாடநூல்
மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி
திருக்குவளை தீய சக்தியே போற்றி
மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி
கனிமொழியின் தந்தையே போற்றி
செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி
அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி
தளபதியின் தந்தையே போற்றி
மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி
குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி
சிங்களவனை வாழவைத்த சிற்பியே போற்றி
ஈழத்தை அழித்த இதயமே போற்றி போற்றி
தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.
20ம் நூற்றாண்டு வரை, திருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில ஏடுகள் திரித்து எழுதிக் கொண்டிருந்தன. 2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார். திருக்குறள் மட்டுமல்லாமல், கருணாநிதி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலி கூறியுள்ளார்.
21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, பாரசீகம், உருது, வங்காளம், இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமல்லாமல், கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.
பத்துக்கு பத்து என்ற சுற்றளவில் இருந்த ஒரு அறையை எப்படி ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர்களாக பெருக்குவது என்பதை மாணவர்கள் பயிற்சி எடுக்கவும்.
1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது. 2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.
விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர். முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி, கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.
தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.
கருணாநிதிக்கு மூன்று மகன்கள். ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.
திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.
தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.
அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார். 21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.
பட்டத்து இளவரசியான தங்கையும் தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்....
---மின்னஞ்சலில் வந்தது. சிலவற்றை சென்சார் செய்து வெளியிட்டிருக்கிறேன்.
அயோத்தி தீர்ப்பு – நீதித்துறை பேசும் காவி மொழியை அம்பலமாக்கும் அரங்ககூட்டம்!
அயோத்தி தீர்ப்பு சரியா? என்ற கேள்வி வரும் போது பலரது பதில் சரியோ தப்போ பிரச்சினையின்றி வழங்கப் பட்டத் தீர்ப்பு என்ற பதில் தான் வருகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க இந்து மதத்தின் நம்பிக்கையில் வழங்கப் பட்டத் தீர்ப்பு மட்டுமே. இந்தத் தீர்ப்பு குறித்த விடயங்களை அம்பலப் படுத்தும் கூட்டம் ஒன்று நாளை நடக்கிறது.
நிகழ்ச்சி நிரல்:
அரங்கக்கூட்டம்
தலைமை : திரு.க.சுரேஷ், வழக்குரைஞர், செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.
கருத்துரை :
”நீதித்துறை பேசும் காவி மொழி” திரு.எஸ்.பாலன், வழக்குரைஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.
“அயோத்தி முதல் ராமன் பாலம் வரை”திரு.ஆர்.சகாதேவன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.
“அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தீ பரவட்டும்”திரு.எஸ்.ராஜு, வழக்குரைஞர், மாநில ஒருங்கினைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
விவாத அரங்கம் :
வாக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்ப்பு! அனைவரும் வாரீர்!
நாள் : 28.11.2010, ஞாயிறு மாலை 4.30 மணி
இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை -17.
தோழமையுடன் அழைக்கும்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்
__________________
20 November 2010
இசுலாமியமும் பெண்ணடிமையும்

பெண்ணை அடிமையாக வைத்திருக்கும் பழக்கம் எல்லா மதங்களிலும் இருக்கின்றன. ஆனால் இசுலாமியம் அதில் சற்று விஞ்சி நிற்கிறதோ எனத் தோன்றுகிறது. சமீபத்தில் நான் சந்தித்த இரண்டு நிகழ்வுகளை இதற்கு உதாரணமாகத் தருகிறேன்.
நிகழ்வு-1
சென்ற மாதம் எனக்கு நெருங்கிய இசுலமிய நண்பனுக்குத் திருமணம் நடைபெற்றது. அவன் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவன். எங்களால் திருமணத்திற்கு செல்ல இயலவில்லை. அதன் பின் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆண், பெண் நண்பர்கள் அனைவரும் புறப்பட்டு சென்றோம்.
அது ஆந்திராவில் உள்ள கத்வால் என்ற இடம். அதிகாலை 4 மணிக்கு இரயில் கத்வாலை சென்றடைந்தது. எங்களை அழைத்து செல்வதற்காக மாப்பிள்ளையின் இரண்டு தம்பிகள் வந்திருந்தனர். ஆண்கள் அனைவரும் அருகிலுள்ள ஒரு லாட்ஜில் தங்க வைக்கப் பட்டோம். பெண்கள் மாப்பிள்ளையின் இல்லத்திலேயேத் தங்க வைக்கப் பட்டனர்.
அவர்கள் வீட்டில் தங்க வைக்கப் பட்ட அனைத்துப் பெண்களுக்கும் சில விதிமுறைகள் வகுக்கப் பட்டன. யாரும் இங்கிருந்து செல்லும் வரை வெளியில் செல்ல அனுமதி இல்லை. அதோடு இல்லாமல் அவர்கள் வீட்டுப் பெண்கள் யாரையும் ஆண்கள் இருக்கும் இடங்களுக்குள் செல்ல அனுமதிப்பதில்லை. அதே போல் இந்தப் பெண்களும் நடத்தப் பட்டனர். அவர்கள் சகஜமாக வெளியில் செல்ல அனுமதி இல்லை.
வீட்டிற்குள்ளேயே முடக்கி வைக்கப் பட்டனர். நண்பர்கள் நாங்கள் மதிய உணவுக்கு மாப்பிள்ளை வீட்டிற்கு அழைக்கப் பட்டோம். அப்போது கூட எங்கள் தோழிகள் எங்களை சந்திக்க அனுமதிக்கப் படவில்லை. எல்லாம் முடிந்து மாலை மாப்பிள்ளை அழைப்புக்கு நாங்கள் லாட்ஜில் இருந்து புறப்பட்டு சென்றோம்.
அங்கு சென்றால் இசுலாமிய திருமணங்களில் நடப்பது போலவே நடுவில் திரை வைத்து மணப்பெண் மற்றும் பெண்கள் ஒரு புறமும், மாப்பிள்ளை மற்றும் ஆண்கள் இன்னொரு புறமும் அமர வைக்கப் பட்டனர். மேலும் பெண்கள் உள் செல்ல தனி வழி அமைக்கப் பட்டது. ஆண்கள் அனைவரும் சகஜமாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தனர். ஆனால் பெண்களுக்கு 144 போடப் பட்டது.
இருக்கும் இடத்தை விட்டு வெளியில் வரக் கூடாது. எந்த ஆணுடனும் நின்று பேசக் கூடாது. இது அவர்கள் வீட்டு பெண்களுக்கு மட்டுமல்ல வரவேற்பிற்கு வந்திருந்த மற்ற மதத்துப் பெண்களுக்கும் சேர்த்து விதிக்கப் பட்ட சட்டம். வரவேற்பிற்கு சென்ற ஆண் நண்பர்கள் யாரும் திருமணப் பெண்ணை இறுதி வரைப் பார்க்க வில்லை.
அங்கிருந்த இரண்டு நாட்களும் எங்கள் தோழிகள் வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டனர் என்று கூட சொல்லலாம். வெளியிலிருந்து வந்த இசுலாமியர் அல்லாதப் பெண்களுக்கே இந்த கதி என்றால் அவர்கள் வீட்டுப் பெண்களின் நிலை என்னவாக இருக்கும்?
நிகழ்வு-2
கடந்த புதன் கிழமை நட்பு ஒருவரின் திருமணத்திற்காக ஈரோடு செல்ல காலை 6:15 கோவை விரைவு இரயிலில் புறப்பட்டேன். எனது இருக்கையைத் தேடிப் பிடித்து அமர்ந்தேன். எனக்கு அருகில் ஒரு பெண் வந்து அமர்ந்தார். ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டோம்.
அவர் பெயரை வைத்து அவர் ஒரு இசுலாமியப் பெண் என்பதைப் புரிந்து கொண்டேன். மேலும் அவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி என்பதையும் அறிந்து கொண்டேன். அதன் பின் அவர் என்னிடமும் அருகிலுள்ள இருக்கைகளில் உள்ளவர்களுடனும் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார்.
பல விடயங்களை சகஜமாக சிரித்து பேசி வந்து கொண்டிருந்தார். அவர் சேலத்தை சேர்ந்தவர். சேலம் இரயில் நிலையம் வந்த போது எங்களிடம் விடை பெற்று கீழிறங்கினார். இரயில் சற்று நேரம் அங்கே நின்றது. சன்னல் வழியே பார்த்த போது அந்தப் பெண் இசுலாமியப் பெண்கள் அணியும் பர்தாவை அணிந்து கொண்டிருந்தார். பின்னர் கண் மட்டும் தெரியுமாறு அதனை அணிந்து வந்து கண்களால் சிரித்து "பை" என்றார். எனக்குப் பாவமாகத் தோன்றியது.
இசுலாமியப் பெண்கள் பயத்தின் காரணமாகவே அந்த அங்கியை அணிகிறார்களோ? என்ற கேள்வி எழுந்தது. அந்தப் பெண்ணின் சந்தோசப் பேச்சுகள், அரட்டைகள், சிரிப்புகள் எல்லாம் இரயிலோடு முடிந்தது.
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் சொல்லப் பட்ட கோட்பாடுகள் இசுலாமிய குரானில் இருக்கின்றனவா? எனத் தெரியவில்லை. அப்படி இருந்தால் இசுலாம் ஒரு பெண்ணடிமை மதமே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படி இல்லை என்றாலும் அந்த மதத்து ஆண்களால் பெண்கள் அடிமைகளாக பாவிக்கப் படுகின்றனர் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
15 November 2010
யார் இந்த ஐரோம் ஷர்மிளா?
நேற்று அசுரன் எழுதிய "பன்னியக் குளிப்பாட்டி அதுக்கு குதிரை என்று பெயர் வை!!" என்ற நல்ல பதிவைப் படித்தேன். அதன் பின் சிலருடனான விவாதங்களுக்குப் பின்னர் "ஐரோம் ஷர்மிளா" யார்? என்பது பலருக்குத் தெரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். அவர்களுக்காக இந்தப் பதிவு.1972-ல் பிறந்த இந்த ஐரோம் சாரு ஷர்மிளா மணிப்பூரின் இரும்புப் பெண் என அனைவராலும் அழைக்கப் படுபவர். நவம்பர் 4, 2000 முதல் இன்று வரை இவர் உண்ணா விரதம் இருந்து வருகிறார். இவர் அப்படி இருக்கக் காரணம் என்ன? ஜனநாயக் நாடு என சொல்லப் படும் இந்தியாவில் உள்ள மணிப்பூரில் என்ன நடக்கிறது?
செப்டம்பர் 11, 1958 முதல் அருணாச்சலப்ரதேஷ், அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம், நாகாலந்து, திரிபுரா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் Armed Forces (Special Powers) Act (AFSPA) நடைமுறையில் இருக்கிறது. இந்த சட்டத்தின் முலம் இராணுவத்திற்கு வழங்கப் பட்டிருக்கும் உரிமைகள் பொது மக்களைக் கொன்று குவிக்கலாம் எனும் அளவில் இருக்கிறது.
*** இந்த சட்டத்தின் படி பொது வெளியில் 5 பேர் சேர்ந்து நின்றால் அவர்களை சுட்டு வீழ்த்தலாம்.
*** மேலும் யாரை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எவ்வித பிடி வாரண்ட் இல்லாமல் கைது செய்யலாம். அவர்களை சுட்டு வீழ்த்தவும் அதிகாரம் உண்டு.
*** இதற்காக அவர்கள் எங்கு வேண்டுமானாலும் எவ்வித உத்தரவுமின்றி தேடுதல் வேட்டை நிகழ்த்தலாம்.
*** இராணுவ அதிகாரிகள் மீது எவ்விதமான வழக்கும் பதிவு செய்ய இயலாது.

இதனை பயன்படுத்தி இராணுவம் அப்பவிப் பொதுமக்களையும் கொன்று குவித்திருக்கிறது. நவம்பர் 1, 2000 ம் ஆண்டு மணிப்பூரில் உள்ல "மலோம்" எனும் நகரத்தில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பத்து அப்பாவி பொதுமக்களை இராணுவம் சுட்டுக் கொன்றது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த போதும் "AFSPA" அதற்கு இடமளிக்கவில்லை. அப்போது 28 வயதே ஆன ஐரோம் ஷர்மிளா இந்த சட்டத்திற்கு எதிரக போர்க் கொடி தூக்கினார். தனது உண்ணாவிரதத்தை நவம்பர் 4, 2000 அன்று துவக்கினார். இந்த சட்டம் அமலில் இருக்கும் மாநிலங்களில் இருந்து நீக்கப் பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
நவம்பர் 6, 2000 அன்று அவர் IPC 309 பிரிவின் கீழ் "தற்கொலை முயற்சி" செய்வதாகக் கூறி போலீசாரால் கைது செய்யப் பட்டார். தண்ணீர் தவிர வேறு ஆகாரங்களை உட்கொள்வதில்லை என்பதில் ஷர்மிளா உறுதியாக இருந்து வருகிறார். ஆனால் கைது செய்யப் பட்ட ஒருவர் உயிரைக் காப்பது காவல் துறையின் வேலை என்பதால் வலுக்கட்டாயமாக அவருக்கு "Nasogastric intubation" (அதாவது மூக்கின் வழியே ஒரு ப்ளாஸ்டிக் ட்யூப் உபயோகித்து நீர் வகை உணவுகளை அளித்தல்) செய்தது.
இதன்பின் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அவர் தற்கொலை முயற்சி எனும் பிரிவில் கைது செய்யப் பட்டு இன்றுவரை சிறையிலிருக்கிறார். ஜீன் 6, 2005ம் ஆண்டு ஜீவன் ரெட்டி கமிசன் இந்த சட்டம் குறித்தான தனது கருத்துக்களைத் தெரிவித்தது. ஆனால் மன்மோகன் சிங் அரசு அதை ஒன்றரை ஆண்டுகள் வரை கிடப்பில் போட்டது. அதன் பின் ப்ரணாப் முகர்ஜி ரெட்டி கமிசன் அளித்த சட்டத் திருத்தக் கருத்துக்களை நிராகரித்தார்.
அத்துடன் அவர் இது போன்ற மாநிலங்களில் இராணுவம் இத்தகைய அதிகாரங்கள் இன்றி செயல் பட முடியாது என கருத்தும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2, 2006 ல் ஷர்மிளா விடுவிக்கப் பட்டது 4 மாத காலங்கள் டெல்லிக்குத் தப்பிச் சென்று அங்குள்ள மாணவர்கள், சமூக அமைப்புகளுடன் கை கோர்த்து ஒரு போராட்ட ஊர்வலம் நடத்தினார்.
அவரது உண்ணாவிரதம் டெல்லியிலும் தொடர்ந்ததால் டெல்லி போலீசாரால் மீண்டும் தற்கொலை முயற்சி பிரிவின் கீழ் கைது செய்யப் பட்டார்.அவர் பிரதமர், குடியரசு தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடித்டங்கள் அனுப்பினார். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இன்று வரை தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வரும் இரும்புப் பெண் ஐரோம் ஷர்மிளாவை நம்மில் பலருக்குத் தெரியாது. காரணம் நமது மீடியாக்களின் கையாலாகாத் தனம் மட்டுமல்ல. நமக்கு அவர் ஒரு சினிமா நாயகியாக இருந்திருந்தால் தெரிந்திருக்கும். ஆனால் அவர் சமூக நாயகியாக அல்லவா இருக்கிறார். எப்படி அவரைத் தெரிந்து கொள்ள முடியும்?




