குப்பனும் சுப்பனும் பூஞ்சோலை கிராமத்தின் விவசாயிகள். அவர்களைப் போல் உழைப்பதற்கு எவனாலும் முடியாது என்பது அந்த ஊராரின் கருத்து. அதுவே அவனின் முதலாளி வெங்கடாச்சலத்தின் கருத்தும் கூட....
வெங்கடாச்சலம் ஆச்சாரம் என்னும் போர்வையை போர்த்திக்கொண்டிருக்கும் குடும்பத்தை சேர்ந்தவன். குப்பனோ சுப்பனோ வயல் வேலைகளை முடித்து தண்ணீர் கேட்டு வந்தால் கூட அவர்களுக்கென்று ஒரு தேங்காய் கூட்டில் தான் தண்ணீர் ஊற்றுவார்.
பின்னர் அவர்கள் உட்கார்ந்த இடம் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்படும். வெங்கடாச்சலம் வீட்டு நாய்க்கு கூட குப்பனயோ சுப்பனையோ தொட அனுமதி இல்லை. நாய்க்கும் ஆச்சாரமாம்.?
ஒரு நாள் குப்பனின் குழந்தை விளையாடிக்கொண்டிருந்த போது வழியில் வந்த வாகனத்தில் அடிப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. வெங்கடாச்சலத்திடம் மருத்துவ செலவுக்கு பணம் கேட்டு சென்ற குப்பனிடம் இருந்த இரண்டு மாடுகளையும் வாங்கிக் கொண்டுதான் பணம் கொடுத்தான்.
குழந்தை உயிர்த் தப்பியது. வழக்கம் போல் குப்பனும் சுப்பனும் தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர். அப்போது வயலுக்கு வந்த வெங்கடாச்சலம் குப்பனிடம், "டேய் குப்பா நீ வாங்குனப் பணத்துக்கு அந்த ரெண்டு மாடும் பத்தாதுடா...அதனால இன்னும் ஒரு மாசத்துக்கு சம்பளம் வாங்காம வேல செய்யணும் என்ன?" என்றார். பதில் பேச முடியாமல் நின்றான் குப்பன்.
சொல்லி விட்டு அருகிலிருந்த மரப் பாலத்தின் வழியே செல்லும் பொழுது பாலம் இடிந்து விழுந்து தண்ணீரில் சிக்கிகொன்டான் வெங்கடாச்சலம். குப்பனும் சுப்பனும் பதறி அடித்துக் கொண்டு வெங்கடாச்சலத்தை கரைக்கு கொண்டு வந்து அவர்களுக்குத் தெரிந்த முதலுதவி செய்துக் காப்பாற்றினார்.
வெங்கடாச்சலத்தை வண்டிக் கட்டி கொண்டு வீட்டில் கொண்டு சேர்த்து விட்டு வழக்கம் போல் வாசலில் நின்றனர் இருவரும். வண்டியிலிருந்து இறங்கிய வெங்கடாச்சலம் தன மனைவியிடம் "ஏ புள்ள செல்வி ஒரு அண்டால தண்ணி கொண்டு வாடி தீட்டாயிப் போச்சு" என்றதும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் சுரீர் என்றது.
இருக்கிறானா இல்லையா எனக் கூடத் தெரியாமல் கடவுளை நம்பும் இவர்களை விட உழைப்பையும் மனிதனையும் மட்டும் நம்பும் நம்மைப் போன்றவர்கள்தான் உண்மையில் உயர்ந்தவர்கள் என நினைத்துக் கொண்டு வீடு திரும்பினர்.
பி.கு: உயிர் காக்க கொடுத்த பணத்திற்கு கணக்கு கேட்டான் வெங்கடாச்சலம். தன உயிரைப் பொருட்படுத்தாமல் அவனைக் காப்பாற்றினர் குப்பனும் சுப்பனும்.
"அறிவியலில் சாதனைப் புரிந்து விட்டு எந்த குப்பனும் சுப்பனும் இத செய்ய முடியுமான்னு"
கேக்குறவன் இவுங்க செஞ்சத செய்ய மாட்டான். அறிவியல் கண்டுபிடிப்பை விட இந்த குப்பனும் சுப்பனும் தான் எனக்கு பெருசாத் தெரியுறாங்க.......