வணக்கம் தோழர்களே! நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் பதிவை எழுதுகிறேன். அலுவல் பணி இரவு பகலாக சென்றதால் கடந்த பதினைந்து நாட்களாக யாருடைய பதிவையும் படிக்கவில்லை. அதனால் பதிவுலகில் நடந்த பிரச்சினைகள் எனக்குத் தெரியவில்லை. நேற்று நண்பர் ஊடகன் மூலம் "பூக்காரி" பிரச்சினைத் தெரிய வந்தது. அது குறித்த பதிவுகள் நீக்கப் பட்டிருப்பினும், வினவு தளம் அதன் பிரதியை வெளியிட்டிருந்தது.
பதிவுலகமும் மற்ற செய்தி ஊடகங்களைப் போல சாக்கடையாகத்தான் மாறிக் கொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஒரு பெண்ணைக் கேவலப் படுத்தும் பதிவு என்ற நோக்கிலேயே எதிர்ப்புகள் பல வெளி வந்தன. அது பெண்ணைக் கேவலப் படுத்தும் பதிவல்ல மனிதத்தைக் கேவலப் படுத்தும் மிருகப் பதிவு.
நர்சிம், கார்க்கி என இரண்டு மிருகங்கள் சேர்ந்து ஒரு மனித இனத்தைத் தாக்கியிருக்கின்றன. இதுவே என் பார்வை. பெண்ணின் பிரச்சினை எனப் பிரித்து ஆணாதிக்கம் காட்டாதீர்கள். மனிதத்திற்கு ஏற்பட்ட கலங்கம் என எண்ணுங்கள். இதுவே அவர்களுக்குள் தனிப்பட்ட விரோதம் தனியிடத்தில் தாக்கிக் கொண்டார்கள் என்றால் அது பற்றி நாம் கவலை கொள்ளப் போவதில்லை.
ஆனால் இந்தப் பிரச்சினை நடந்திருப்பது ஒரு பொது வெளியில். அதுவும் சக பதிவருக்கு சக பதிவரால் நடந்திருக்கிறது. இதை வெறும் செய்தி போல் பாவித்து பலர் தங்கள் அனுதாபங்களையும், எதிர்ப்புகளையும் அரசியல் கட்சிகள் போலவேக் காட்டியிருந்தனர். நன்றாக இருக்கிறது உங்கள் பதிவுலக அரசியல்.
பதிவர்களாகிய நாமும் நம் பதிவுகளில் சுடச்சுட செய்தி வெளியிட்டு பின் அது பற்றி மறந்து போகும் வியாபார செய்தி ஊடகங்கள் போல் செயல் படுகிறோம். அந்த பிரச்சினைகளும் நமது அரசியலால் கிடப்பில் போய் விடுகிறது. யார் தீர்வு காண்பது? என யாரும் யோசிப்பதில்லை.
அந்த தோழியின் "'பூக்காரி'களுக்கும் சுயமரியாதை உண்டு" என்ற பதிவைப் படித்தேன். அவரது தைரியம் கண்டு வியந்தேன். பெண் என்ற அடிமைத்தனம் இல்லாதவராக இருக்கிறார். இதில் சிலர் இந்த பிரசினையை இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள் என அறிவுரை வேறு. அறிவுரை செய்தவர்களில் பெண்ணடிமைத்தனத்தை எதிர்க்கும் ஒரு பெண்ணும் உண்டு என்பதுதான் எனக்கு வருத்தமளிக்கிறது.
அந்த தோழியின் பதிவிற்கும், அதற்கு ஆதரவான வினவின் பதிவிற்கும் தமிழ்மணத்தில் விழுந்த மைனஸ் வாக்குகளைப் பார்க்கும் போது, எவ்வளவு ஆணாதிக்க வாதிகள் உலவும் இடம் இந்த பதிவுலகம் என்பதுப் புரிகிறது. இங்கு பலர் கருத்துக்களுக்கும், பதிவுகளுக்கும் வாக்களிப்பதில்லை. எனக்கு நீப் போட்டியா? உனக்கு நான் போடுறேன் என்றுதான் போய்க் கொண்டிருக்கிறது. ஏன் நான் கூட ஆரம்ப காலத்தில் அப்படித்தானிருந்தேன்.
கருத்துக்கு வாக்களிப்பவர்கள் வெகு சிலரே. தயவு செய்து யாரும் குழு மனப்பான்மையில் வாக்களிக்காதீர்கள். குழுவாக இருங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை. பதிவின் தரத்திற்கு மட்டும் அங்கீகாரம் கொடுங்கள். அப்போதுதான் இந்தப் பதிவுலகம் ந்நல்ல பாதையில் செல்லும்.
இந்தப் பூக்காரிப் பிரச்சினையின் துவக்க வாரத்தில் வந்த எதிர்ப்புகள் இப்போது காணப் படவில்லை. அது பழைய செய்தியாகவே மாற்றப் பட்டிருக்கிறது.
//ஒரு முக்கிய அறிவிப்பு.. கொஞ்ச நாட்கள் இதே வேலையாக எல்லோரும் கருத்துச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். //
இந்த வரிகள் இந்தப் பிரச்சினைக்கு பின் அவரின் "இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்?" என்ற பதிவில் வந்தவை. அரசியல் சூட்சுமங்கள் தெரிந்தவர். நாமும் கொஞ்ச நாட்கள் இது குறித்து பேசி விட்டு அவர் சொன்னது போலவே அடங்கிப் போயிருக்கிறோம்.
//நான் எழுதிய புனைவு சில பேரை காயப்படுத்தியிருக்கிறது. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். சந்தனமுல்லை அவர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.//
இது தான் இந்தப் பிரச்சினையின் தீர்வா? ஒரு பெரிய கலங்கத்தை ஏற்படுத்தி விட்டு இரண்டு வரியில் மன்னிப்புக் கேட்டால் போதுமா?
//முல்லையையும் முகிலையும் நம்மையும் நர்சிம் சந்திக்கும் இடம் பதிவர் சந்திப்பாக இருக்க வேண்டும். பெண் பதிவர்கள் உள்ளிட்ட எல்லாப் பதிவர்களின் முன்னிலையில், இந்த விவாதத்தில் பங்கு பெற்ற எல்லா பதிவர்கள் மற்றும் வாசகர்கள் முன்னிலையில், உண்மைத் தமிழர் உள்ளிட்ட எல்லாத் தமிழர்களின் முன்னிலையில், நர்சிம், கார்க்கி முதலானோரும் தங்களது மன்னிப்பை வெளியிடட்டும். கள்ள உறவு கதை கட்டிப் பரப்பிய பெருமக்களும் தங்கள் முகத்தை அங்கே காட்டட்டும். முகத்தை வெளிக்காட்டும் தேவை இல்லாததால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற வசதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்//
இந்தப் பிரச்சினையில் நான் வினவோடு ஒத்துப் போகிறேன். வினவில் சொல்லியிருப்பது போல் ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்து அதில் இந்தப் பிரச்சினை விவாதிக்கப் பட்டு அங்கு அந்த இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
நான் கண்டனம் தெரிவிக்க எழுதவில்லை. தீர்வு கேட்டு எழுதியிருக்கிறேன். மனசாட்சி உள்ளவர்கள் பதில் சொல்லுங்கள்.