செய்யும் தொழிலை
பொறுத்து பிரிக்கப் பட்ட சாதீய அமைப்பில்
வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் செந்தம் விட்டு, சாதி விட்டு செய்யும்
திருமணங்கள் கலாச்சார சீரழிவாக பலரால் பார்க்கப் படுகிறது.
சொந்தத்திற்குள் செய்யும்
திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு இருக்க வாய்ப்பிருப்பதாக
அறிவியல் அறிவுறுத்துகிறது. இது இன்றும் கூட அறிவியலின் தொடர் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்
பட்ட ஒன்றாக இருந்து வருகிறது.
இது ஒரு புறம்
இருக்கட்டும். சுய சாதித் திருமணங்கள், சொந்தத்திற்குள் நடக்கும் திருமணங்கள்
எல்லாம் மாபெரும் பின்னனி கொண்டதாக இருக்கிறது. இதன் பின்னணியில் சாதி, சொத்து,
அடிமைத்தனம் போன்ற பல்வேறு காரணிகள் ஒளிந்திருக்கின்றன.
இதை எல்லாம் மறைத்து வைக்க
பயன்படுத்த படும் வார்த்தை தான் இந்த கலாச்சார சீரழிவு. இத்தகைய கலாச்சார
காவலர்கள் ரசித்து பார்த்து, கை தட்டி மகிழும் நிகழ்ச்சி தான் “சூப்பர் சிங்கர்
ஜீனியர்”. குழந்தைகளை போலியான ஒரு உலகிற்குள் இழுத்து சென்று அவர்களின் குழந்தை
பருவத்தை சீரழிக்கும் ஒரு நிகழ்ச்சி இது.
சிறு வயதிலேயே தோல்வியை
தாங்கும் பலத்தை அவர்கள் இழக்கிறார்கள். அதை விளம்பரமாக்கி காசு பார்க்கும் வேலையை
செய்கிறது இந்த நிகழ்ச்சி. அதோடில்லாமல் அந்த குழந்தைகளை குத்து பாட்டு பாட
வைத்து, அப்பாடல்களில் வரும் காம உணர்வின் ஒலிகளை மீண்டும் பாட சொல்லி ரசிக்கும்
மன நிலையில் அதன் நடுவர்களும் அதை வைத்து காசு பார்க்கும் தொலைக் காட்சியும்
செய்வது தான் நிஜமான கலாச்சார சீரழிவு.
ஆனால் இந்த கலாச்சார
காவலர்கள் இந்த நிகழ்ச்சியை ரசித்து ருசித்து பார்த்து அதை குழந்தைகளின் திறமை என
வேறு சொல்கிறார்கள்.