கடவுளை மற..மனிதனை நினை..

04 January 2010

பெண்ணடிமைத்தனத்திற்கு பெண்களே ஆதரவு

2:11:00 AM Posted by புலவன் புலிகேசி 59 comments
விஜய் தொலைக்காட்சியிலிருந்து சுடப்பட்ட நிகழ்ச்சி என்பதால் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. ஆனால் மதுரை முத்துவின் நகைச்சுவைகள் பிடிப்பதால் அவர் பேசுவதை மட்டும் கேட்பது வழக்கம்.

அப்படித்தான் சென்ற சனிக் கிழமையும் அந்த நிகழ்ச்சியில் முத்துவின் நகைச்சுவைகளை ரசித்து கொண்டிருந்தேன். பேசி முடிக்கையில் அவர் ஒரு சிறந்த விடயத்தை பற்றி அழகாக கூறுவார். அன்று அவர் தமிழகத்தின் பெருமையாக சொன்ன விடயம் என்னவென்றால்

"தமிழ்நாட்டு பெண்கள் சிறுவயதில் திருமணம் முடித்து கணவனை இழந்தாலும் வேறு ஒருவனை நினைக்காதவர்கள்" என்றார். இதற்கு பெண்கள் உட்பட அனைத்து ரசிகர்களிடமிருந்தும் கைத்தட்டல்கள். எனக்கு ஒரே குழப்பமாகி விட்டது.

உண்மையில் யோசித்தால் இது கைத்தட்டப்பட வேண்டிய விடயமா? நிச்சயமாக இல்லை. சிறு வயது திருமணம் என்பதே சட்டப்படி குற்றம். அதோடில்லாமல் விதவைகள் மறுமணமும் எதிர்க்கப்ப்ட்டிருக்கிறது. ஒரு ஆண் மனைவியை இழந்தால் பெரும்பாலும் மறுமணம் செய்து கொள்கிறான். பெண் செய்து கொண்டால் அது குற்றமாம். அப்படி மறுமணம் செய்யாமல் இருப்பவள் பத்தினியாம்(கிராமப்புறங்களில் இன்றும் நீடிக்கும் நிலை இது).

இது பெண்களை அடிமைப் படுத்தும் கருத்தாகவே எனக்கு தோன்றியது. இது போன்ற சிறுவயது திருமணங்கள் நடப்பது இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் குறைவுதான் என்றாலும் விதவைகள் மறுமணம் செய்து கொள்வதும் குறைந்து போய்தான் இருக்கிறது.

அவரின் இந்த கருத்துக்கு பெண்களிடமிருந்தும் கைத்தட்டல் கிடைத்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்தது. "பெண்களே பெண் அடிமையாதலை ஆதரிக்கிறார்களா?". ஊடகங்களில் இது போன்று பிரபலமானவர்கள் அதிகம் ஆராயமல் கருத்து வெளியிடுவது பலருக்கு அதிருப்தியை தருவதோடு இது போன்ற விடயங்கள் பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மையை கூட ஏற்படுத்தக் கூடும்.

அவர் சொல்ல வந்த கருத்து என்னவோ தமிழ்நாட்டு பெண்கள் கற்பில் சிறந்தவர்கள் என்பதுதான். ஆனால் அதற்கு சுட்டிய உவமை ஆணாதிக்கத்தை மிகைபடுத்தி காட்டியிருக்கிறது. கற்பு என்று ஒன்று உண்டெனில் அது இருபாலருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க வேண்டும்.

பெண்களுக்கு மட்டும் தினிக்கபடுவதாக இருக்க கூடாது. இதை பெருமையாக பேசி பேசியே பெண்ணடிமைத்தனம் வளர்க்கப் பட்டிருக்கிறது. ஆணின் கற்பு பற்றி அதிகம் பேச்சுக்கள் எழுந்ததில்லை. இதற்கு காரணம் அவன் கருவுறுவதில்லை. ஆணிடம் இல்லாத ஒரு இயல்பு பெண்ணிற்கு இருந்தும் அதை வைத்தே அவள் அடிமைபடுத்த படுவதுதான் கொடுமையான விடயம்.

இன்று பெண்கள் பல துறைகளில் சாதனைகள் புரிந்து வருகிறார்கள், பெண்ணடிமைத்தனம் குறைந்திருக்கிறது. இருந்தாலும் முழுமையாக நீங்காத ஒன்றாகவே இவ்வடிமைத்தனம் இருந்து வருகிறது. சாதனை புரிந்த பெண்களை கேட்டால் நிச்சயம் தெரியும் அந்த சாதனைக்கு தடைக்கலாக இருந்த ஆணாதிக்கம் பற்றி. என்று மாறும் இந்த நிலை? விடை தெரியா கேள்விகளுடன் முடித்திருக்கிறேன்.




பெண்ணே தடைகளை தகர்த்தெறி
மன்னில் நீயும் ஒரு
மனிதப்பிறவி என்பதை மறந்து
விடாதே.....

02 January 2010

டரியல் (02-சனவரி-2010)

6:08:00 AM Posted by புலவன் புலிகேசி 30 comments
இந்த வாரம் புத்தாண்டின் முதல் டரியல். 2009ன் இறுதியில் என் 50 பதிவை முடித்து 100+ நண்பர்கள் பெற்றேன். அது மட்டுமல்லாது விகடன் எனக்கு 3 புத்தகங்கள் (மின்னிதழ்) பரிசளித்துள்ளது. அவை

1) என்.எஸ். கிருஷ்ணன்
2) அம்பேத்கர்
3) தெருவாசகம்

இப்பதான் ஒன்னொன்னா படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.

--------------------------------

கேபிளார் சொன்னபின் நேற்றைய தினமணி வாங்கி படித்தேன். நம் வலைப்பூக்கள் பற்றி ஒரு சிறப்பு கட்டுரை வெளிவந்திருந்தது. அதில் நம் நண்பர்கள் பலரது வலைப்பூக்கள் சுட்டப் பட்டிருந்தது. தினமணிக்கு நன்றிகள். நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது ஒரு ஆரோக்யமான வளர்ச்சி. இதை நல்ல விடயங்களுக்காக பயன் படுத்துவோம். தயவு செய்து யாரும் சாதி மதங்கள் பற்றி சண்டையிட வேண்டாம். சமீபத்திய "பர்தா" பதிவால் வந்த சர்ச்சைகளை படித்து மிகவும் வருத்தமடைந்தேன். இது போன்று யாரும் எழுதவும் வேண்டாம். இதற்கு எதிர் பதிவு எழுதி சண்டையிடவும் வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். (நான் மதம் சாதி சித்தரிப்பு கடவுள்களை நம்பாமல் மனிதத்தில் கடவுள் காண்பவன்).

--------------------------------

என் பார்வையில் சென்ற ஆண்டு தமிழ் திரையுலகம்

சிறந்த படம்: பசங்க

ஒரு அருமையான வாழ்வியல் பிரதிபலிப்பாக வெளிவந்த இந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது. சிறுவர்களை வைத்து முதல் முறை ஒரு முழுநீளப் படம் எடுத்து அசத்திய பாண்டிராஜீக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

சிறந்த பாடல்: துளி துளி துளி மழையாய் (பையா)

2008 வாரணம் ஆயிரம் பாடல்கள் மனதில் நின்ற அளவிற்கு 2009ல் எந்த பாடலும் நிற்கவில்லை. இருந்தாலும் அயன் படத்தின் "விழிமூடி யோசித்தால்" ரசிக்கும் படியிருந்தது. பையா படப் பாடல்கள் முன்னரே கேட்டது போல் தோன்றினாலும் வரிகள் அழகு. பல பாடல்கள் வெளிவந்த நேரம் பிடித்து அப்புறம் அலுத்து விட்டது.

சிறந்த திரைத்துரை மனிதர்: . ஆர். ரகுமான்

இரண்டு ஆஸ்கர் விருது பெற்று கொடுத்த முதல் இந்தியர். எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர். அமைதியான அடக்கமான மனிதர். 2010-லாவது நிறைய தமிழ்பாடல்களை அவரிடமிருந்து எதிர் பார்க்கிறேன்.

--------------------------------

கடந்து வந்த தோல்விகளை
வாறியெடுத்து சேர்த்து
கட்டிய வெற்றி மாலையுடன்
பிறந்திருக்கிறது புத்தாண்டு
மலர் உதிர்வதற்குள் முயற்சி
கொண்டு பெற்று விடுவோம்

புத்தாண்டு வாழ்த்து பதிவில் சேர்க்கலாம் என தோன்றியது. ஆனால் முன்னரே வெளியிட்டதால் சேர்க்கவில்லை.

--------------------------------

எனது தொழில்நுட்ப வலைப்பூவில் (புலிகேசியின் Microsoft .Net) Microsoft .Net and SQL () பத்தி எழுதி வருகிறேன். நடுவில் சில காலம் அதில் எழுதவில்லை. இன்று முதல் தொடர்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். .Net இல்ல SQL தெரிஞ்ச யாராவது அதில் வரும் பதிவுகளில் கலந்துரையாட வாங்க.
தெரிஞ்சிக்கனும்னு ஆசை படுறவங்க வந்து பாருங்க.

--------------------------------

இந்த வார டரியல் நம்ம தோழி மலிக்காவின் "அரையடி நாக்கு" என்ற கவிதை பதிவு. யாகாவாராயினும் நாகாக்க என்பதை சுட்டும் கவிதை. படிக்கலைன்னா படிச்சிப் பாருங்க.

--------------------------------

01 January 2010

புத்தாண்டில் வெற்றி பெற

7:21:00 AM Posted by புலவன் புலிகேசி 18 comments

வெற்றியை நோக்கி பயணிப்போருக்கு
ஒவ்வொரு நாளும் புத்தாண்டு

சென்ற நாளின் தோல்விகளை
தேடிப் பிடித்து இன்று

மீண்டும் வெற்றியை நோக்கி
பயணிப்போம் புத்தாண்டு

புது நாள் ஆகிவிடும்
புத்துணர்வு பெருகும்

தோல்வி தூரமாகி விடும்
வெற்றி சொந்தமாகி விடும்

இந்த புத்தாண்டு அனைவருக்கும் பற்பல வெற்றிகளை பெற்று தர வாழ்த்துக்கள்..